கால்லே டெஸ்ட் போட்டியின் போக்கை தினேஷ் சந்திமாலின் அதிரடி 162 ரன்கள் மாற்றிப் போட்டது. இந்திய அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இலங்கை.
வெற்றி பெற 176 ரன்களுடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி மீண்டும் லோகேஷ் ராகுலை மலிவாக இழந்தது. அவர் 5 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தை தவறாக பின்னால் சென்று ஆடி எல்.பி.ஆனார். ஆட்ட முடிவில் ஷிகர் தவண் 13 ரன்களுடனும் இரவுக்காவலன் இசாந்த் சர்மா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.
2-வது இன்னிங்சில் 3-ம் நாளான இன்று 95/5 என்று இலங்கை சரிவு கண்ட நிலையில் இந்திய டி.ஆர்.எஸ். பிடிவாதம் அம்பலமாக திரிமானே, சந்திமால் இருவருக்கும் நாட் அவுட் தீர்ப்பு மோசமாக வழங்கப்பட ஆட்டத்தின் போக்கு மாறியது.
உணவு இடைவேளைக்குப் பிறகு புதிய கேப்டன் கோலிக்கு புதிய சவாலை அளித்தார் தினேஷ் சந்திமால், அவருடன் ஓரளவுக்கு திரிமானே, பிறகு ஜெஹன் முபாரக் ஆகியோர் இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்து வெறுப்பேற்றியதோடு கடைசியில் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது.
நடுவர் தீர்ப்புகள் குறைந்தது 6 முறையாவது மோசமாக அமைந்ததை சுட்டிக் காட்ட முடியும். விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, சஹா, சந்திமால், லாஹிரு திரிமானே, மீண்டும் சந்திமால் ஆகிய தீர்ப்புகள் நடுவர்களின் தரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
சந்திமால் 169 பந்துகளில் 19 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 162 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 100 ரன்கள் தேவைப்படும் நேரத்தில் களமிறங்கினார் சந்திமால். நடுவர் சாதகம் இருமுறை இவருக்கு இருந்தது என்றாலும் அது அவருடைய தவறல்ல, அதனை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மிகவும் துல்லியமாக வீசிக் கொண்டிருந்த அஸ்வினின் லைன் மற்றும் லெந்த்தையே காலி செய்தார், ஸ்வீப் ஆடினார், எங்கு போட்டாலும் ஸ்வீப் ஆடினார், ஸ்வீப் ஆட முடியாது வீசினால் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினர், ஒரு முறை ஹர்பஜனை ரிவர்ஸ் ஸ்வீப்பில் கவர் திசையில் சக்தி வாய்ந்த சிக்சரையும் அடித்தார்.
திரிமானேவும் சாதக பலன்களை பயன்படுத்தி 44 ரன்களை எடுத்தார், ஆனால் சந்திமால் அளவுக்கு இவர் இந்திய வீச்சாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கவில்லை.
24 ஓவர்களில் இருவரும் 125 ரன்களை விளாசினர், அப்போது திரிமானே, அஸ்வின் பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக இன்று
காலை வந்தவுடன் பிரசாத், ஆரோனின் பவுன்சரில் வெளியேற, மேத்யூஸ், சங்கக்காரா இணைந்து 87 ரன்களைச் சேர்த்தனர். அதன் பிறகே சங்கக்காரா, மேத்யூஸ் ஆகியோர் முறையே அஸ்வின், மிஸ்ரா ஆகியோரிடம் அவுட் ஆனார்.
திரிமானே ஆட்டமிழந்த பிறகு ஜெஹன் முபாரக் இறங்கி சந்திமாலின் வழியை பின்பற்றி ஸ்வீப், மேலேறி வந்து ஆடுவது என்று அடித்து நொறுக்கினார். ஹர்பஜன் சிங் பந்து வீச்சு கடும் ஐயங்களைக் கிளப்புகிறது. பந்தில் போதிய பிளைட் இல்லை. பிட்ச் செய்யும் இடமும் எளிதாகவே உள்ளது. 17 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார், இவருக்கு பதிலாக பிராக்யன் ஓஜாவை அழைத்துச் சென்றிருந்தால் பலன் கிடைத்திருக்கும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.
11 டெஸ்ட் போட்டிகளில் 17 ரன்களை சராசரி வைத்துள்ள முபாரக் இறங்கியவுடன் மேலேறி வந்து மிஸ்ராவை காலரிக்கு அனுப்பினார். சந்திமாலும் இவரும் இணைந்து 82 ரன்களைச் சேர்த்தனர். முபாரக்கிற்கு முதல் அரைசத வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் ஹர்பஜனிடம் அவுட் ஆனதற்கு அவர் வருந்திஹிருப்பார். 49 ரன்களில் அவர் வெளியேறினார்.
7-வது விக்கெட்டுக்குப் பிறகும் முன்னிலையை கட்டுப்பாட்டில் இந்தியாவால் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சந்திமாலின் அபார பேட்டிங் அமைந்தது. 7-வது விக்கெட்டுக்குப் பிறகு வீசப்பட்ட 83 பந்துகளில் அவர் 45 பந்துகளைச் சந்தித்து சேர்க்கப்பட்ட 65 ரன்களில் 52 ரன்களை பங்களிப்பு செய்தார்.
இந்தப் போட்டியில் முடிவுகள் கடினமாக அமைந்தால் நிச்சயம் இந்தியா டி.ஆர்.எஸ் எதிர்ப்பை கைவிடும் என்றே கருதப்படுகிறது.
பந்துவீச்சில் மீண்டும் அஸ்வின் 114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிஸ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வருண் ஆரோனை இன்னும் கொஞ்சம் பாசிட்டிவாக பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால், நிச்சயம் சந்திமால் இதே தொடரில் இன்னொரு முறை இன்று ஆடியது போன்று அவ்வளவு அனாயசமாக ஆடிவிட முடியாது என்பதை எதிர்பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago