காயத்திலிருந்து திரும்பிய பிறகு பும்ரா பந்து வீச்சு எப்படி? - ஓர் அலசல்

By இரா.முத்துக்குமார்

செப்.2019 ஜமைக்கா டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக பும்ரா பந்து வீசினார். காயத்திற்குப் பிறகு எத்தனை பெரிய பவுலராக இருந்தாலும் வீசும் போது கொஞ்சம் மனதில் காயம் பற்றிய பயம் இருக்கும். பும்ராவும் இதற்கு விதிவிலக்கல்ல என்று தெரிந்தது.

காயத்தினால் அவர் வேகத்தில் சமரசம் செய்து கொள்ளாவிட்டாலும், ஏதோ ஒன்று அவர் பந்து வீச்சில் இந்தூர் டி20 போட்டியில் இல்லாமல் போனது. குறைந்த ரன் அப்பில் ஓடி வந்து சுருக் சுருக்கென்று வீசி திணறடிப்பார், அந்த சுருக் தன்மை பும்ராவிடம் காணாமல் போயிருந்தது.

முதல் பந்தே சரியாக அமையாத இன்ஸ்விங்கரானது, அதை ரிஷப் பந்த் மேலும் சொதப்பலாக்கினார், கூடுதல் ரன்னை வழங்கினார், 2வது பந்து வைடு ஆஃப் வாலி பந்து அவிஷ்கா பெர்னாண்டோ அதை முறையாக நான்கு ரன்களுக்கு அனுப்பி வைத்தார்.

பும்ரா தன் 4 ஓவர்களை 4 ஸ்பெல்களில் வீசச் செய்யப்பட்ட போதே அவரது ஃபிட்னெஸ் குறித்த ஐயங்களை கிளப்புவதாக அமைந்தது. ஆம். ஒரு ஒரு ஓவராக அவர் 4 ஓவர்களை வீசினார். ஆனாலும் தன் 52வது டி20 விக்கெட்டைக் கைப்பற்றி யஜுவேந்திர சாஹலுடன் அதிக டி20 விக்கெட் இந்திய பவுலர் பட்டியலில் இணைந்தார். என்ன.. சாஹல் 36 போட்டிகளில் 52 விக்கெட். பும்ரா 44 போட்டிகளில் 52 விக்கெட். அஸ்வின் 46 போட்டிகளில் 52 விக்கெட். ஜடேஜா 46 போட்டிகளில் 35 விக்கெட். ஆனால் ஜடேஜா குறைந்த ஓவர் கிரிக்கெட் அணியில் இருக்கிறார், அஸ்வின் புறக்கணிக்கப்படுகிறார் என்பது வேறு விஷயம்.

இந்தூர் பிட்ச் ஒரு மட்டைப் பிட்ச் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் பும்ரா இதைவிட மட்டைப் பிட்ச்களில் வீசி பழக்கப்பட்டவர்தான். ஆனால் பலவீனமான இலங்கை பேட்டிங் வரிசை பும்ராவை 6 பவுண்டரிகள் அடித்தது பும்ராவுக்குக் கவலையளிக்கும் ஒரு அம்சமாகும். அதிலும் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள். கடந்த 34 டி20 இன்னிங்ஸ்களில் பும்ரா ஓவருக்கு 2 பவுண்டரிகளுக்கு மேல் கொடுத்ததில்லை. இலங்கையின் வனிந்து ஹசரங்கா 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக பும்ராவின் கடைசி ஓவரில் அடித்து இலங்கை ஸ்கோரை 140க்கும் மேல் கொண்டு சென்றார். பொதுவாகவே தீப்பொறி பறக்கும் பந்து வீச்சு கொண்டவர் பும்ரா, அவரைக் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் அடிக்க முடிகிறது என்றால், தொடருக்கு முன் லஷித் மலிங்கா கூறியது போல் காயத்துக்குப் பிறகு பும்ராவிடம் தாக்கம் இருக்காது, அதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றார். அதுதான் நேற்று நடந்தது.

ஹசரங்கா அடித்த 3 பவுண்டரிகளில் ஒன்று ஷார்ட் பிட்ச், இன்னொன்று சரியாக வீசாத யார்க்கர், அடுத்த பவுன்சர் டாப் எட்ஜ் பவுண்டரி ஆனது. பும்ரா 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஸ்டார் பவுலர் இப்படி வீச அதிகம் எதிர்ப்பார்க்காத நவ்தீப் சைனி 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்றும் ஷர்துல் தாக்குர் 23 ரன்களுக்கு 3 விக்கெட் என்றும் அசத்தினர்.

நியூஸிலாந்து தொடருக்கு முன்பாக பும்ரா தன் பந்து வீச்சில் இழந்ததை மீட்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஏனெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வாழ்க்கையில் காயம் என்பது சாதாரணமாக மீண்டு வரக்கூடியதல்ல என்பதே வரலாறு நமக்கு சுட்டுவதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்