இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஒடிசா மாநிலம் கட்டக்கில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதை ஈடுகட்டும் வகையில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடுகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு இந்தத் தொடர் மிக முக்கியமானதாகும்.
இலங்கை அணி முழு அளவில் தயாராகாத நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை வலுப்படுத்திக் கொள்ள இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். கேப்டன் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் விராட் கோலி தலைமையில் இந்தியா களமிறங்குகிறது.
கோலி தலைமையில் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளை யாடியுள்ள இந்திய அணி அதில் 9-ல் வெற்றி கண்டுள்ளது. இதற்கு முன்னர் கேப்டனாக இருந்தபோது கோலி 3 சதங்களையும் அடித்துள் ளார். அதனால் கேப்டன் பதவி அவருக்கு பெரிய நெருக்கடியாக இருக்காது என தெரிகிறது.
கோலி, ரெய்னா மிரட்டல்
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவ ரான அஜிங்க்ய ரஹானே, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக ஆடியதைப் போலவே இந்தத் தொடரிலும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
மிடில் ஆர்டரில் கோலி, ரெய்னா ஆகியோர் இந்தியாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். இருவருமே நல்ல பார்மில் இருப்பதால் இலங்கைக்கு எதிராக பெரிய அளவில் ரன் குவிப்பார்கள் என நம்பலாம். இதேபோல் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர். தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்று வரும் அம்பட்டி ராயுடு உலகக் கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டுமானால் இந்தத் தொடரில் ரன் குவிப்பது அவசியம். பந்துவீச்சைப் பொறுத்த
வரையில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின், வருண் ஆரோன் அல்லது அக்ஷர் படேல் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவலையளிக்கும் பந்துவீச்சு
இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு போதிய அளவில் தயாராகாமல் வந்திருக்கும் இலங்கை அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான லசித் மலிங்கா, சுரங்கா லக்மல் மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஜந்தா மென்டிஸ், ரங்கனா ஹெராத் ஆகியோர் இடம்பெறாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனவே பந்துவீச்சில் பிரசன்னா, குலசேகரா, சூரஜ் ரன்திவ் ஆகி யோரை நம்பியுள்ளது இலங்கை.
பேட்டிங்கை பொறுத்த வரையில் மூத்த வீரர்களான குமார் சங்ககாரா, மஹேல ஜெயவர்த்தனா ஆகியோரையே நம்பியுள்ளது இலங்கை. தொடக்க வீரர்களான தில்ஷான், குஷல் பெரேரா ஆகியோர் சிறப்பாக ஆடி வலுவான தொடக்கத்தை அமைத்து கொடுப்பது மிக முக்கியமானதாகும். பின்வரிசை யில் கேப்டன் மேத்யூஸ், திசாரா பெரேரா ஆகியோர் பலம் சேர்க் கின்றனர். இலங்கை அணி யின் புதிய தலைமைப் பயிற்சி யாளரான மாறவன் அட்டப்பட்டு இலங்கை அணியை சிறப்பாக செயல்பட வைக்க வேண்டிய சவாலை எதிர்நோக்கியிருக்கிறார்.
மைதானம் எப்படி?
போட்டி நடைபெறும் பாரபட்டி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். 280 முதல் 300 ரன்கள் வரை எடுக்கப்படலாம் என மைதான பராமரிப்பாளர் பட்நாயக் தெரிவித்துள்ளார். மாலையில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்ப தால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் பட்நாயக் குறிப்பிட்டுள் ளார். எனவே டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியா:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, விருத்திமான் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முரளி விஜய், வருண் ஆரோன், அக்ஷர் படேல்.
இலங்கை:
ஏஞ்செலோ மேத்யூஸ் (கேப்டன்), குஷல் பெரேரா, திலகரத்னே தில்ஷான், உபுல் தரங்கா, மஹேல ஜெயவர்த்தனா, ஆஷன் பிரியாஞ்சன், நிரோஷன் டிக்வெல்லா, திசாரா பெரேரா, நுவான் குலசேகரா, தமிகா பிரசாத், லஹிரு கேமேஜ், சதுரங்க டி சில்வா, சீகுகே பிரசன்னா, சூரஜ் ரனதேவ்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago