கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக சேஸிங் செய்து வெற்றிபெற்றுள்ளது.
262 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியான துவக்கம் கொடுத்தனர். இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை எல்லைக் கோட்டை தாண்டி பறக்கவிட்டு ஈடன் கார்டன் மைதான ரசிகர்களை குஷிப்படுத்தினர். பவுண்டரிகளை விட சிக்ஸர்களை பறக்கவிட்டனர் இருவரும். பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 54 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.
எனினும், ஜானி பேர்ஸ்டோவ் தனது அதிரடி பாணியை கைவிடவில்லை. மறுபக்கம் ரில்லி ரூசோவ் 26 ரன்களுக்கு அவுட் ஆனாலும் ஷஷாங்க் சிங் உடன் சேர்ந்து, இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை ஒரு கை பார்த்தனர். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடிக்க, அதேநேரம் தொடர் சிக்ஸர்களை பறக்கவிட்டு ஷஷாங்க் சிங் அரைசதம் பதிவு செய்தார்.
இறுதிக்கட்டத்தில் இருவரும் தீயாக விளையாட பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி வெற்றியைப்பெற்றது. மொத்தம் 2 விக்கெட்களை மட்டுமே இழந்த பஞ்சாப் 262 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. ஜானி பேர்ஸ்டோவ் 108 ரன்கள், ஷஷாங்க் சிங் 68 ரன்கள் எடுத்திருந்தனர். இதில் குறிப்பாக ஜானி பேர்ஸ்டோவ் 9 சிக்ஸர்களும், ஷஷாங்க் சிங் 8 சிக்ஸர்களும் விளாசினர்.
கொல்கத்தா இன்னிங்ஸ்: முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்ததது. அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக சுனில் நரைன் - பிலிப் சால்ட் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து விளாசித்தள்ளியதில் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்களைச் சேர்த்தது கொல்கத்தா. அரைசதம் கடந்து களத்தில் நின்றிருந்தவர்களை அவுட்டாக்க முடியாமல் பஞ்சாப் பவுலர்கள் தடுமாறினர்.
4 சிக்சர்கள் விளாசி 71 ரன்களைச் சேர்த்திருந்த சுனில் நரைனை 11ஆவது ஓவரில் ராகுல் சாஹர் அவுட்டாக்கினார். அவரின் பிரிவை தாங்க முடியாததாலோ என்னவோ 13ஆவது ஓவரில் பிலிப் சால்ட் 75 ரன்களில் போல்டானார். 6 சிக்சர்கள் விளாசி அதிரடி காட்டியிருந்தார்.
இரண்டு ஓப்பனர்களும் கிளம்ப, வெங்கடேஷ் ஐயர் - ரஸல் இணை கைகோத்தது. இந்தப் போட்டியில் ரஸல் 2 சிக்சர்களை விளாசியதன் மூலம் கேகேஆரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஐபிஎல்லில் இதுவரை அவர் 201 சிக்சர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் 24 ரன்களில் அவரும் விக்கெட்டானார்.
3 சிக்சர்கள் விளாசி 10 பந்துகளில் 28 ரன்களை சேர்த்து அதிரடி காட்டிய ஸ்ரேயஸ் ஐயரை அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார். தொடர்ந்து வந்த ரின்கு சிங் 5 ரன்களில் விக்கெட்டாகி கிளம்ப, கடைசி பந்தில் 38 ரன்களில் வெங்கடேஷ் ஐயர் ரன்அவுட் என நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 261 ரன்களை குவித்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
க்ரைம்
22 mins ago
தமிழகம்
47 mins ago
உலகம்
39 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
57 mins ago
வாழ்வியல்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago