சந்ததியை வாழச் செய்வான் குமரக்கோட்ட குமரன்!

By வி. ராம்ஜி

நகரேஷூ காஞ்சி என்று காஞ்சியம்பதியைச் சொல்வார்கள். அதாவது, நகரங்களில் சிறந்தது காஞ்சி எனும் பெருமை காஞ்சி மாநகருக்கு உண்டு. இங்கே, முக்தி தரும் தலங்கள் ஏராளம். அவற்றுள் முக்கியமானதொரு தலம், குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.

சிவனாருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் ஏராளமான கோயில்கள் இங்கே உள்ளன. அதேபோல், உலகுக்கே தலைவியாகத் திகழும் காமாட்சி அன்னை கோலோச்சும் புண்ணிய பூமியும் இதுவே!

அதேபோல், சிற்பக் கலைக்குப் பெயர் பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அனைத்துக் கோயில்களிலும் சிற்பங்கள், கட்டிடங்கள், தூண்கள், பிராகார அமைப்புகள், முன் மண்டபங்கள், அர்த்த மண்டபங்கள் என நம்மைப் பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள், பல்லவ கால சிற்ப நுட்பத்துக்கு உதாரணங்கள்.

திருவேகம்பம் என்று சொல்லப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் திருக்காமக்கோட்டம் எனப்படும் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் நடுவே சோமாஸ்கந்த அமைப்பில், கோயில் கொண்டிருக்கிறார் சுப்ரமணிய சுவாமி.

ஓம் எனும் பிரணவப் பொருள் தெரியாததால், பிரம்மாவை சிறை வைத்தார் முருகக் கடவுள் என்பது தெரியும்தானே. அப்போது பிரம்மாவைப் போன்று, ருத்திராட்ச மாலை, கையில் கமண்டலம் கொண்டு பிரம்மசாஸ்தாவாக திருக்கோலம் பூண்டு, இங்கே காட்சி தருகிறார் கந்தவேலன்.

புராணங்களில் சிறப்புடையது என்று எல்லோராலும் போற்றப்படுவது கந்த புராணம். அத்தகு புண்ணியம் நிறைந்த கந்த புராணம் அரங்கேறிய திருத்தலம்... குமரக்கோட்டம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பற்ற தலம். இங்கே உள்ள முருகப் பெருமான், திகடச்சக்கரம் என அடியெடுத்துக் கொடுக்க, தனக்குப் பூஜைகள் செய்து வந்த கச்சியப்ப சிவாச்சார்யரைக் கொண்டு கந்த புராணம் எழுதப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

கந்த புராணம் அரங்கேறிய திருமண்டபத்தை, இன்றைக்கும் ஆலயத்தில் காணலாம். அருணகிரிநாதர் இங்கு வந்து, அழகன் முருகனின் அழகில் மயங்கி, திருப்புகழ் பாடிப் பரவியிருக்கிறார்.

காஞ்சிக்கு வந்து, குமரக்கோட்டம் கோயில் தெரியாமல் வேறு எங்கோ சென்று விட்ட பாம்பன் சுவாமிகளை, சிறுவனாக வந்து வழிகாட்டியதுடன், ஆலயத்துக்கும் அழைத்துச் சென்றாராம் முருகப் பெருமான்.

கந்த சஷ்டி நாளில், மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி நாளில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், காஞ்சியில் உள்ள குமரக்கோட்டத்துக்கு வந்து, 108 முறை பிராகார வலம் வந்து வேண்டிக் கொண்டால், எண்ணிய யாவையும் நிறைவேற்றித் தந்தருள்வார் வேலவன் என்கிறார்கள் பக்தர்கள். பரணி, கிருத்திகை, பூசம் நட்சத்திர நாட்களிலும் வந்து 108 முறை பிராகார வலம் வந்து, வடிவேலவனை தரிசித்துப் பிரார்த்திக்கலாம். நம்மையும் நம் சந்ததியையும் காத்தருள்வான், குமரக்கோட்ட குமரன்!

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

கல்வி

13 mins ago

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

39 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

மேலும்