’பாபாவின் உதி (விபூதி) உங்களிடம் இருக்கிறதா?’ 

By வி. ராம்ஜி

பாபாவின் உதி எனப்படும் விபூதி உங்களிடம் இருக்கிறதா? அந்த விபூதியில் வாசம் செய்யும் சாயிபாபா, உங்கள் துக்கங்களையெல்லாம் போக்கி அருளுவார்.

பகவான் சாயிபாபாவை, இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபா என்பவர் சாதாரண மனிதரைப் போல் நம்மிடையே உலவினார். அவரைப் பார்க்கப் பார்க்க, அவரின் அருளாடல்களைப் பார்க்கப் பார்க்க, ‘இவர் நம்மைப் போல் மனித ரூபத்தில் இருக்கிறார். ஆனால், இவர் மனிதரில்லை. மகான். நம்மையெல்லாம் உய்விக்க வந்த மகான்’ என்று கொண்டாடினார்கள் பக்தர்கள். மகிழ்ந்து வணங்கினார்கள்.
‘பாபா’ என்று வார்த்தைக்கு வார்த்தை பாபாவின் திருநாமம் சொல்லி அவரை பூஜித்துக் கொண்டே இருக்கிறார்கள் பக்தர்கள். பின்னொரு தருணத்தில், பாபா என்பது கடவுள் சொரூபம் என்பதாக மெய்சிலிர்த்து ஷீர்டியை நோக்கி வணங்கினார்கள். ஷீர்டி எண்ணற்ற பக்தர்கள், பாபா திருச்சமாதி அடைந்த பிறகும் ஷீர்டிக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக்கொண்டார்கள்.

இதோ... இன்றைக்கும் ஷீர்டி எனும் புண்ணிய பூமிக்குச் சென்று பாபாவை சூட்சுமமாகத் தரிசித்து வருகிறார்கள் பக்தர்கள்.

இப்போது, பாபாவுக்கு இந்தியா முழுவதும் ஆலயங்களும் மந்திர்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வியாழக்கிழமைகளில், குரு சாயிநாதனை அருகிலுள்ள பாபா கோயில்களுக்குச் சென்று தரிசிப்பதையும் பிரார்த்தனை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

‘நாங்கள் சாயி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள் சாயி பக்தர்கள். ‘சாயி பகவான் எங்களின் தந்தை’ என்று உணர்ச்சிப் பெருக்கிட பூரித்துச் சொல்கிறார்கள்.

’பகவான் சாயிபாபா எங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றி அருளுவார். அவரின் உதி (விபூதி) எங்களிடம் இருக்கிறது. அந்த விபூதியில் பாபா வாசம் செய்கிறார். அவர் எங்களுக்கு நல்வழி காட்டி அருளுவார்’ என்கிறார்கள் பக்தர்கள்.

‘நீ தயாராக இரு. உன் வேலைகளையெல்லாம் முடித்துக் கொடுக்க தயாராகிவிட்டேன். உன்னுடைய கர்மவினைகள் முடியும் தருணத்தில் உனக்கானதையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்’ என்கிறது சாயி சத்சரிதம்.

உங்களிடம் பாபாவின் உதி (விபூதி) இருக்கிறதா? நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். உங்கள் துக்கங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும். இதுவரை பட்ட அவமானங்களில் இருந்து அந்த விபூதியில் சூட்சுமமாக இருந்து உங்களை பாபா கைவிடாமல் காத்தருளுவார்’ என்பது லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் விவரிக்கிறார்கள்.

பாபாவின் ‘உதி’ (விபூதி) மகிமைமிக்கது. மகோன்னதமானது. பாபா ‘உதி’ இருக்கும் வீடுகளை துஷ்ட சக்திகள் ஒருபோதும் நெருங்காது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்