‘’வருஷம் தவறினாலும் தவறலாம். ஆனால் வருடந்தோறும் சபரிமலைக்குச் செல்வதும் ஐயப்பனை கண் குளிரத் தரிசிப்பதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஒரு வருடத்துக்கு, ஐந்தாறு முறை கூட சபரிமலைக்குச் செல்லும் வழக்கம் உள்ளவன். அப்படிச் செல்லும் போதெல்லாம், செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொள்வது மாதிரி, எனக்குள் சார்ஜ் ஏற்றி அருளுகிறார் ஐயப்ப சுவாமி’’ என்று நெகிழ்வும் மகிழ்வும் பொங்கச் சொல்கிறார் ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ.
கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் பிறக்கும் வரைக்கும், சபரிமலைக்கு மாலையிட்டு, விரதம் இருந்து சபரிமலை யாத்திரை செல்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும். கார்த்திகை மாதம் தொடங்கி தை மகர ஜோதி வரையிலான காலம், பக்தர்களுக்கு ஐயப்பனைத் தரிசிக்கும் காலம். காவி மற்றும் கறுப்பு நிற வேட்டிகளுடன் ஐயப்ப சாமிமார்களை எங்கும் பார்க்கலாம். எங்கு பார்த்தாலும் ஐயப்ப பஜனைகள், பூஜைகள் என அமர்க்களப்படும்.
அதேபோல், குருசாமியின் தலைமையில், ஐயப்ப சாமிமார்கள், யாத்திரைக்கு புறப்பட்டுச்சென்று கொண்டிருப்பதை வழியெங்கும் பார்க்கலாம். ஊரெங்கும் பார்க்கலாம்.
பயணங்கள் எப்போதுமே சுகமானவை. மனிதர்களையும் மலைகளையும், மரங்களையும் கடைகளையும் பார்த்துக் கொண்டே செல்வதில், ஒரு சந்தோஷம்; குதூகலம். இன்றைக்கு சாலைகள் விரிவாக்கத்தால், பயணங்களின் காலநேரம் சுருங்கிவிட்டன. அதனாலேயே பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. வாகனங்கள் பெருமளவு வந்துவிட்டன. அவரவர் வசதிக்கேற்ப, உரிய வாகனங்களைத் தேர்வு செய்து கொண்டு, நாற்கரச் சாலைகளில் ஊரை நோக்கிப் பறக்கிறோம். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் பயணப்படுவதே சுகமெனில், ஊரில் உள்ள உறவுகளையோ நண்பர்களையோ பார்ப்பதற்குப் பயணப்படுவதே அலாதி ஆனந்தமெனில், இறைவனைத் தரிசிப்பதற்கான பயணம், இன்னும் சுகமானது அல்லவா. பேரின்பம்தானே!
’’சபரிமலை யாத்திரை என்பதும் அப்படியொரு ஆனந்த அனுபவம்தான். சந்தனம் மணக்கும் சந்தன அபிஷேகப் பிரியனின் மலையில், ஏகாந்தமாய் வீற்றிருக்கும் சபரிமலையானைத் தரிசிப்பதே மிகப்பெரிய குதூகலம்தான்’’ என்கிறார் ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ. .
இன்றைக்கு சபரிமலைப் பயணத்துக்கு ரயில் வசதிகள் அதிகரித்துவிட்டன. கார் வேன்கள் பெருகிவிட்டன. பம்பா நதிக்கரை வரை வாகனங்களில் சென்று விடலாம். எங்கு பார்த்தாலும் பம்பையில் இருந்து மின் விளக்குகள் ஒளியை பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன. பகலைப் போல் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
’’ஆமாம்... நடப்பதற்குப் பாதைகளும் படிகளும் இன்றைக்கு போடப்பட்டாகி விட்டன. ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு, சின்னச் சின்னதான மேடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தடுக்கி விழுந்தால் டீக்கடைகளும் ஜூஸ் கடைகளும் உணவகங்களும் வழிநெடுக இருக்கின்றன. படியில் ‘ஏத்தி விடப்பா... தூக்கி விடப்பா...’ என்று சொல்லிக் கொண்டே சாமிமார்கள் விறுவிறுவென நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், உடல் பருமனானவர்களும் வயதானவர்களும் நடப்பதற்கு வசதியாக கைப்பிடிகள் உதவிக்கரம் நீட்டுகின்றன. ஐயப்பனை தரிசிக்கும் உற்சாகத்தில், உத்வேகத்தில், வயதான சாமிமார்கள் கூட இளைஞர்களைப் போல் தெம்பாகிவிடுவார்கள். இப்படியான வயதான இளைஞர்களை ஒவ்வொரு முறை சபரிமலைக்குச் செல்லும் போதெல்லாம், பார்த்திருக்கிறேன். இவை எல்லாமே ஐயப்பனின் அருள் விளையாடல்’’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் வீரமணிராஜூ.
‘வயசாயிருச்சுதான். ஆனாலும் ஐயப்பனை போன வருஷம் போல, அதுக்கும் முந்துன வருஷம் போல தொடர்ந்து இத்தனை வருஷமாப் பாத்தது போல, இந்த வருஷமும் பாத்துடணும். ஆனா வயசாயிருச்சு. உக்கார்ந்தா எந்திரிக்க முடியல. நின்னா உக்கார முடியலை. நடந்தா, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்குது’ என்று உடலை நினைத்து புலம்பினாலும் விரதமிருந்து, இருமுடி சுமந்து செல்கிற பக்தர்கள் லட்சத்துக்கும் மேலே. அதேசமயம் மலையேற முடியாமல் சிரமப்படுவோருக்கு, ‘டோலி’கள் வரிசைகட்டி இருக்கின்றன.
அந்தக் காலத்திலும் ‘டோலி’கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் மனிதர்களைச் சுமந்து செல்வதற்காக ஏற்பட்டது அல்ல. ஐயப்ப சுவாமிக்கு, பூ பழங்களும் பூஜைப் பொருட்களும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டன. ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக, மளிகைப் பொருட்களும் காய்கறிகளும் அரிசி மூட்டைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. மாறிவிட்ட உணவுப் பழக்கங்களும் தடாலென்று வந்துவிட்ட உடல் பருமனும் இன்றைய பக்தர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். அந்தச் சிரமத்தில் இருந்து அவர்களைக் காக்க, ‘டோலி’கள் உதவுகின்றன.
‘எப்படியோ... மலையேறி ஐயப்பனை வருஷம் தவறாம பாத்துடணும்’ என்கிற பக்தர்களே அதிகம்.
‘’வருஷம் தவறினாலும் தவறலாம். ஆனால் வருடந்தோறும் சபரிமலைக்குச் செல்வதும் ஐயப்பனை கண் குளிரத் தரிசிப்பதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஒரு வருடத்துக்கு, ஐந்தாறு முறை கூட சபரிமலைக்குச் செல்லும் வழக்கம் உள்ளவன். அப்படிச் செல்லும் போதெல்லாம், செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொள்வது மாதிரி, எனக்குள் சார்ஜ் ஏற்றி அருளுகிறார் ஐயப்ப சுவாமி’’ என்று நெகிழ்வும் மகிழ்வும் பொங்கச் சொல்கிறார் ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ.
’’சிறு வயது முதல் ஐயப்பனை தரிசித்து வருகிறேன். ஒரு வருடத்துக்கு ஐந்தாறு முறை கூட தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் ஐயப்பனின் திருமேனி தரிசனமும் அவர் எனக்குள் ஏற்படுத்துகிற புத்துணர்ச்சியும் வார்த்தைகளே இல்லாதவை. இவற்றை சொல்லிப் புரியவைக்கவோ உணரச் செய்யவோ முடியாது. ஒவ்வொருவரும் புரிந்து உணர்ந்தால்தான் ஐயன் ஐயப்பனின் பெருங்கருணையை அறிந்துகொள்ளமுடியும்.
செல்போன் போல நமக்கும் ‘சார்ஜ்’ அவசியம். ஐயப்ப சுவாமி அப்படியொரு எனர்ஜியைத் தருகிறார்’’ என்று சிலிர்ப்பு மாறாமல் விவரித்தார் வீரமணி ராஜூ.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago