குருப்பெயர்ச்சியில்... திட்டை திருத்தலத்தின் நாயகன் குரு பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். குரு பலமும் குரு யோகமும் பெறுவீர்கள். இன்று நவம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை குருப்பெயர்ச்சி.
குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம்.
நவக்கிரகங்களில் சுபகிரகம் வியாழ பகவான். அந்த வியாழ பகவான் தான், தேவர்களின் குரு. அவரைத்தான் பிரகஸ்பதி என்பார்கள். இவர்தான் குரு பகவான். குருப்பெயர்ச்சி என்பது இவருக்குத்தான். இவரை வைத்துத்தான் குருப்பெயர்ச்சி.
ஒருவரின் வாழ்வில், குருவின் கடாக்ஷம் இருந்துவிட்டால், செய்யும் தொழில் சிறக்கும். பதவி உயர்வு இருக்கும். நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள். குருவருளுடன் இறையருளும் கிடைக்கப்பெறுவார்கள்.
நவக்கிரகத்தில் உள்ள வியாழ பகவான், தேவர்களின் குரு, குருவுக்கெல்லாம் குரு. ராஜகுரு. குருவுக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர் தட்சிணாமூர்த்தி.
ராஜ குரு என்று போற்றப்படும் வியாழ பகவான், தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கும் திருத்தலம் தென்குடித்திட்டை. தஞ்சாவூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித்திட்டை. இங்கே உள்ள அற்புதமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறார் ராஜகுரு.
இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் வசிஷ்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் உலகநாயகி அம்மை, மங்களாம்பிகை. தஞ்சாவூர், கரந்தை, பள்ளியக்ரஹாரம் அடுத்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 2 கி.மீ. பயணித்தால் திட்டை திருத்தலத்தை அடையலாம்.
வேதங்கள் நான்கும் சிவனாரை வணங்கி வழிபட்ட திருத்தலம் என்று திட்டை ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. திருஞான சம்பந்தர், இந்தத் தலத்து இறைவனை, வசிஷ்டேஸ்வரரை மனமுருகிப் பாடியுள்ளார். தலத்தின் பெருமையைச் சிலாகித்துப் போற்றியுள்ளார்.
கரைபுரண்டு ஓடும் காவிரியாறில் இருந்து கிளை பிரிந்து வெட்டாறு, வெண்ணாறு என ஓடுகின்றன. இந்த இரண்டு கிளை ஆறுகளுக்கும் நடுவே அழகுற அமைந்திருக்கிறது திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலம்.
வசிஷ்ட மகரிஷி, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, பர்ணசாலை அமைத்து கடும் தவம் புரிந்து வந்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், சுயம்புமூர்த்தமாக சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளினார். இதனால் இந்தத் தலத்து இறைவனுக்கு சுயபூதேஸ்வரர், வசிஷ்டேஸ்வரர் என திருநாமங்கள் அமைந்தன. காமதேனுப் பசு வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம் இது என்பதால் இங்கே உள்ள சிவனாருக்கு பசுபதீஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு.
அதுமட்டுமா? தேனுபுரீஸ்வரர் என்பார்கள். நாகநாதர் என்பார்கள். நாகேஸ்வரர் என்பார்கள். ரதபுரீஸ்வரர் என்பார்கள்.
வசிஷ்டரும் காமதேனுவும் மட்டுமின்றி இன்னும் பலரும் இங்கே சிவ வழிபாடு செய்திருக்கிறார்கள். ஸ்ரீபிரம்மா, மகாவிஷ்ணு, காலபைரவர், சூரிய பகவான், சனீஸ்வரர், யமதருமன், இந்திரன், கெளதமர், ஜமதக்னி முனிவர் முதலானோரும் கடும் தவம் புரிந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.
இத்தனை பெருமைமிகு ஆலயத்தில்தான் குரு பகவான், தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார். தன்னை நாடி வரும் அன்பருக்கெல்லாம் குருவருளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
குருப்பெயர்ச்சி நாளில் இங்கே சிறப்பு ஹோமங்கள், பரிகார ஹோமங்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.
திருமணம் தள்ளிப்போகிறதே என்று கலங்குபவர்கள், நல்ல வேலை கிடைக்கவில்லையே என வருந்துபவர்கள், குழந்தை பாக்கியம் இன்னும் வாய்க்கவில்லையே என கண்ணீர் விடுபவர்கள், கடன் தொல்லையில் தவிப்பவர்கள், வழக்கில் நல்ல தீர்ப்புக்காகக் காத்திருப்பவர்கள்... குருவருளைப் பெற வேண்டும் எனில், ராஜகுரு பகவானை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தி அருளுவார் குரு பகவான்.
வியாழக்கிழமை, குரு ஹோரை முதலான தருணங்களில், திட்tடை குரு பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். குருப்பெயர்ச்சி நன்னாளையொட்டி, உங்கள் வாழ்வில் எல்லா சத்விஷயங்களையும் தந்தருளும் குரு பகவானை வேண்டிக்கொள்ளுங்கள். குரு பலமும் குரு யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள். திட்டை குரு பகவான், எல்லா வளமும் நலமும் தந்தருள்வார்.
குருப்பெயர்ச்சியில்... எல்லோருக்கும் குருவருள் கிடைக்கட்டும்! .
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
தமிழகம்
15 mins ago
சினிமா
21 mins ago
இந்தியா
2 mins ago
கருத்துப் பேழை
11 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இலக்கியம்
8 hours ago