வி.ராம்ஜி
சிவபெருமானுக்கு உரியது வில்வ இலை. பிள்ளையாருக்கு எப்படி அருகம்புல்லோ, பெருமாளுக்கு எப்படி துளசியோ, அம்மனுக்கும் முருகனுக்கும் எப்படி செந்நிற மலர்களோ... அதேபோல், சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சிப்பதும் அலங்கரிப்பதும் ரொம்பவே விசேஷம்.
சரி... வில்வம் குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தன்மையையும் அறிந்துகொள்வோம்.
தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள் என்பவற்றைக் குறிக்கும். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே செல்லவேண்டாம்.
வில்வ மரத்தின் வாசனை, அதன் வேர்களில் உள்ள குளிர்ச்சி ஆகியவற்றுக்கு பாம்புகள் வரும் என்பார்கள்.. ஆனால், வீட்டில் வில்வ மரத்தை வைத்துக் கொள்வது மிகவும் விசேஷம். தவ விருட்ஷோத பில்வ: என்று சூக்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது,, மகாலட்சுமி அந்த மரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது சாஸ்திரம். எனவே, "யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்.''
வில்வத்தில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் என்பது வரை இருக்கின்றன. இதில் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு வில்வத்திலும் மும்மூர்த்திகள் நித்தியவாசம் செய்கின்றனர் என்பதாக ஐதீகம்.
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.
வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்தாலே போதுமானது என்பர். இப்படி தண்ணீர் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் பல உன்னதங்களைத் தந்தருளும்.
வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாகவும் சொல்கிறது ஸ்தல விருட்ச மகிமைகள்.
தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை,
வில்வம்) என்று வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.
வில்வ மரத்தை வழிபடுவதால் சிவபெருமானின் அருள் மட்டும் அல்ல... லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம்.
வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது.
சிவ பூஜையின் போது, வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகலும். தோஷங்கள் மறையும். தென்னாடுடைய சிவனின் அருளுக்குப் பாத்திரமாகலாம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
ஒரேயொரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது தர்மசாஸ்திரம்.
இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை என்று ஒரு வில்வத்தைச் சொல்லுவார்கள். இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி ரூபம் என்று சொல்லி யாகத்திற்குப் பயன்படுத்துவார்கள்.
அப்படிப் பயன்படுத்தினால், வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைத்து, இல்லத்தில் சுபிட்சம் எப்போதும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago