மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலாக பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.
சேவை என்று தெரியாமலே அவரவரும் குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டங்களுக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதனாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும் என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில் கால்நடைகளுக்காக என்றே குளம் வெட்டுவது. அவை தினைவு தீர்த்துக்கொள்வதற்காக உராய்ந்துகொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பதை “கோ க்ராஸம்” என்றால் ஒரு வாயளவு (Mouthful) இங்கிலீஷில் புல்லை grass என்பதுகூட இதிலிருந்தே வந்திருக்கலாம்.
யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவஸம் முதலிய இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற உலகங்களிலிருப்ப வர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு சேர்த்துச் செய்யப்படும் சேவை.
நம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்துகொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பண் செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.
வாழ்க்கைத் தொல்லை களிலேயே கொஞ்சம் உல்லாச மாகப் போக்குவது ஒரு தப்பா என்று கேட்பீர்கள். உங்களுக்குச் சொல்கிறேன். பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்று தெரியும். அதுவே விளையாட்டு. அதுவே இன்பம்.
கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான். குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது வெளியிலே பார்த்தால் விளையாட்டு. உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காகச் செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ சேவைகள் செய்தான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுகள் செய்தான். அத்தனையும் சேவை. எவனைப் போல் விளையாடினவன் இல்லையோ அவனைப்போல் சேவை செய்தவனுமில்லை என்று கிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம்.
லெளகிக சேவை மட்டுமில்லை. ஞான சேவையும் நிறைய செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுகெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும். தைரியம், ஊக்கம் இவற்றோடு.
பகவான் எடுத்த பல அவதாரங்களில் கிருஷ்ணவதாரத்தில்தான் சேவை அதிகம். ராமாவதாரத்தில் சேவைக்கென்றே ஆஞ்சநேய ஸ்வாமி வந்தார். இவர்கள் இருவரையும் ஸ்மரித்து நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுயநலமும் கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும். நமக்குத் தீட்டு ஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல் ஒதுங்கியிருக்கிறோமல்லவா. அவ்விதமே உலகுக்கு உபயோக மாகச் சேவை செய்யாத ஒவ்வொரு நாளும் நமக்குத் தீட்டு நாள் என்று கருதி, அவரவரும் தம்மாலான சேவையில் ஈடுபடவேண்டும்.
ஜீவராசிகளுக்குச் செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட பரமேஸ்வரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.
நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின்
படமாடக் கோயில்பகவற்கீ தாமே.
இதற்கு அர்த்தம், மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும் என்பது.
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
56 mins ago
உலகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago