குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: துலாம் ராசி வாசகர்களே!

By வேங்கடசுப்பிரமணியன்

தர்ம நியாயம் பேசும் நீங்கள், நேர்மையான பாதையிலேயே பயணிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து கைமீறிய செலவுகளையும் வீண்பழி, பகை, மன உளைச்சல் என உங்கள் நிம்மதியைச் சீர்குலைத்துக் கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது 02.09.2017 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து 02.10.2018 வரை ஜென்ம குருவாக அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

யோகா, தியானம், உணவுக் கட்டுப்பாடு ஆகியவை அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் விவாதம், சண்டை சச்சரவு, சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். உதவி கேட்டு வரும் உறவினர், நண்பர்களுக்கு வாக்குறுதி எதுவும் தர வேண்டாம். உங்களால் முடிந்ததை மட்டும் செய்யுங்கள்.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளிடமிருந்த பிடிவாதக் குணம் மறையும். மகன் கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவார். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். இளைய சகோதரர் உங்களின் பாசத்தை உணர்வார். தங்கைக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். டி.வி, ப்ரிஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். சொந்த ஊரில் மரியாதை கூடும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். குரு பகவான் உங்களின் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும்.

பிரிந்திருந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தள்ளிப்போன திருமணம் இனி தடபுடலாக நடக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உதவியுண்டு. பணப்பற்றாக்குறையால் பாதியிலே நின்ற வீடு கட்டும் வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உங்களின் பாக்கிய வீடான 9-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் ஓரளவு வருமானம் உயரும்.

அதிக வட்டிக்கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழிச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வெளியூர்ப் பயணங்கள் சாதகமாக அமையும். ஆனால், குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புது வேலை அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வேற்றுமதம், மாற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.

குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் கடன் பிரச்சினையால் நிம்மதி குறையும். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதைச் சரியாகப் பின்பற்றாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். எதிர்பாராத திசையிலிருந்து வரும் உதவியால் மீட்கப்படுவீர்கள்.

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு பகவான் அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். புறக்கணித்த சொந்தபந்தங்கள் வீடுதேடி வருவார்கள். உங்கள் ஆலோசனைகளுக்கும் மதிப்பு ஏற்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிட்டும்.

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்தபந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். மன அழுத்தம் நிலவும் சமயங்களில் ஆலயங்களுக்குச் சென்று வரவும். ஞானிகளின் சமாதிகளுக்குப் போய் தியானம் செய்தால் மன அமைதி கிட்டும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்வீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் அவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். பதவி உயர்வுக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். சம்பளமும் கூடும். அயல்நாட்டுப் பயணம் வாய்க்கும்.

இந்தக் குருப்பெயர்ச்சி வீண் சந்தேகம், வேலைச்சுமையால் உங்களை அலைகழித்தாலும் போராட்டக் குணத்தாலும் விடாமுயற்சியாலும் வெற்றிபெறவைக்கும்.

பரிகாரம்:

வேலூரில் சைதாப்பேட்டை மெயின் பஜார் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமகான் தோபாசுவாமிகள் ஜீவ சமாதிக்கு ரேவதி நட்சத்திர நாளில் சென்று தியானம் செய்யுங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள். ஆரோக்கியம், அழகு கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

39 mins ago

தமிழகம்

33 mins ago

க்ரைம்

34 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்