வள்ளலார் சன்மார்க்க சங்கம் ஒவ்வொரு வாரமும் திருவருட்பா சொற்பொழிவை நடத்துகிறது. கடந்த வாரம் டாக்டர் எம்.ஏ. ஹுசேன் சிற்றறிவு எது, பேரறிவு எது என்னும் தலைப்பில் திருவருட்பா நெறிகளை கே.கே.நகர், நவசக்தி விநாயகர் கோயில் அரங்கில் பேசினார். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட உலக நாடுகளிலும் சென்று பரப்பிவருபவர்களில் ஹுசேன் குறிப்பிடத்தகுந்தவர். அவர் பேசியதிலிருந்து…
எல்லா உயிரும் முக்கியம்
தனக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. தானே பேராற்றல் படைத்தவன். இறைவன் என்று ஒருவன் கிடையாது என்றெல்லாம் பேசுவது சிற்றறிவு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து பேசுவதும் அந்த அருட்பெருஞ்சோதியில் கரைவதற்கான முயற்சியை எடுப்பதும் சக உயிர்களின் மேல் கருணையோடு இருப்பதும் பேரறிவு.
பகுத்தறிவு எது?
‘ஜோதி ஜோதி ஜோதி பரம்’, ‘நினைந்து நினைந்து உருகி’ போன்ற திருவருட்பா பாடல்களைப் பாடியவர், இறைச் சிந்தனையில் ஈடுபடுவதும், இறை ஜோதியில் கலப்பதற்கான வழியைத் தேடுவதுமே பகுத்தறிவு என்றார்.
அடிப்படையில் மருத்துவராக இருப்பதால் உடலின் பாகங்கள், உணவால் உருவாகும் ரத்தம், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் அவற்றின் பணிகள் ஆகியவற்றையும் ஆன்மிக உரையின் நோக்கம் மாறாமல் பேசினார் ஹுசேன்.
அறிவில் சிறந்த விலங்குகள்
புலால் புசிப்பவர் பிற இனத்தார் என்று சொல்லும் வள்ளலார், அவர்களை வெறுக்காமல் நேசிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறார். அதுவே பேரறிவு. அதுவே சுத்த சன்மார்க்கத்தின் வழி. மனிதனைவிட அறிவில் விலங்குகள் மேம்பட்டவை.
நல்ல பாம்பின் வழித்தடத்தில் காகிதங்களை எரித்துப் போட்டுவிட்டால் போதும், தன்னுடைய வழித்தடத்தில் ஆபத்து என்பதை வெகு தொலைவில் வரும்போதே கண்டுணரும் சக்தி பாம்புக்கு உண்டு. இந்த அறிவு மனிதனுக்கு இருக்கிறதா?
ரமலான் நோன்பின் தத்துவம்
நோன்பிருக்கும் போதுதான் பசியின் அருமை உனக்குப் புரியும். அதைத் தொடர்ந்து பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்கவும் போதிக்கிறது ரமலான் நோன்பு. தொழுகையால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்.
ஆனால், மக்களுக்குச் செய்யும் சேவையால், தொண்டால் உனக்கு இறைவனே கிடைப்பான் என்கிறது திருக்குரான். இதை உணர்ந்துகொண்டால், அதுதான் பேரறிவு. சுயநலம் சிற்றறிவு, பொதுநலம் பேரறிவு. உலகில் துன்பப்படும் எந்த ஜீவனையும் காப்பதுதான் ஜீவகாருண்யம்.
சமயங்களும் சடங்குகளும் மனிதர்களைப் பிரிக்கும்; சன்மார்க்கம் மனித உயிர்களிடத்தில் தனிப் பெருங்கருணையை வளர்க்கும். இத்தகைய சன்மார்க்க சிந்தனையே பேரறிவு என்று தன் உரையை நிறைவுசெய்தார் ஹுசேன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago