ஓடிடி திரை அலசல் | The Good Nurse - சீரியல் கில்லரை துப்பறியும் ஒரு நட்பின் பாதை!

By பால்நிலவன்

‘தி குட் நர்ஸ்’ (The Good Nurse) திரைப்படத்துக்கான அடிப்படை சார்லஸ் கல்லன் என்றொரு குற்றவாளிதான். சார்லஸ் கல்லன் பற்றி எதாவது இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்த்தால் நூற்றுக்கணக்கான விவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. யார் இந்த சார்லஸ் கல்லன்? 2003-ல் கைது செய்யப்படும் வரையில் ஒரு சீரியல் கில்லராக 400 கொலைகள் செய்த ஒரு கொடியவர். ஆனால், வெரி ஸ்மார்ட் என்று சொல்லக்கூடிய அப்பாவியான தோற்றம் கொண்ட ஒரு கிரிமினல்.

உலகையே குலுக்கிய ஒரு குற்றச் செய்தியை ஒட்டி புற்றீசலாய் பெருகிவரும் விவரங்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு திரைப்பட இயக்குநர் என்ன செய்ய முடியும். அதெல்லாம் ஆவணக் குறிப்புகளாக பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு படைப்பாளிக்கு அது எந்தவிதத்திலும் உதவாது. நம்ம ஊரில் மக்கள் புரட்சிக் குழு பற்றிய நம் காலத்தின் கதை ஒன்றை திரையில் காட்டவேண்டும் என்று சொன்னால் அன்றுள்ள சில நாளிதழ்கள், சிறுபத்திரிகைகள் குறிப்புகளை வைத்து வெஸ்ட் ஸ்டோரீஸ் டைப் திருடன் - போலீஸ் காமிக்ஸ் கதைகளை சடுதியில் உருவாக்கி விடுவார்கள் நமது இயக்குநர்கள். அதற்கும் சமூக வலைதளங்களில் சண்டையை மூட்டி வேடிக்கைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தபடி அதன்மூலமாகவே கல்லா நிறைத்துக்கொண்டு அடுத்த புரட்சிகர மசாலா படத்திற்கு தாவிவிடுவார்கள்.

‘தி குட் நர்ஸ்’ இயக்குநர் அவ்வகைப்பட்ட இயக்குநரல்ல. இதில் அப்படி எதுவும் குழப்பிக்கொள்ளவுமில்லை. இணையதளங்களில் மட்டுமன்றி நிறைய புத்தகங்களும் சார்லஸ் கல்லன் பற்றி நிறைய வந்துள்ளன. ஆனால், இதையெல்லாம் மண்டையில் ஏற்றிக்கொண்டு சிறுகதையில் கொஞ்சம், நாவலில் கொஞ்சம், உண்மைச் சம்பவங்களில் கொஞ்சம் என்று அவியல் செய்யும் வேலையிலும் அவர் ஈடுபடவில்லை. ஒரு க்ரைம் த்ரில்லர் என்பதற்காக கதையை கசாப்புக் கடையாக மாற்றிவிடாமல் மருத்துவமனை நடவடிக்கைகள் எவ்வளவு கவுரவமானது என்பதும் இப்படத்தில் கவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் அருமையை மருத்துவர்கள், செவிலியர்களின் அருமையை முன்னெப்போதையும்விட இந்த உலகம் கரோனா காலத்தில் கண்டறிந்தது. வணங்கி ஆராதித்தது. இதனை மனதில் வைத்துதான் ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் உள்ளீட்டை மருத்துவமனைகள் எவ்வளவு பொறுப்பு வாய்ந்தது, செவிலியர்கள் - மருத்துவர்களின் எவ்வளவு தன்னலமற்ற சேவைகள் ஆற்றிவருகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, இப்படத்தின் செவிலியர் ஆமி லாப்ரன் என்ற பெண்மணியை சித்தரித்த விதம். அவரே இப்படத்தின் மைய கதாபாத்திரமாகவும் உள்ளார். ஒரு செவிலியராக இருந்து பல கொலைகள் செய்த சீரியர் கில்லரை பாத்திரத்தை மையக்கதாபாத்திரமாக சித்தரிக்காமல் மருத்துவ உலகை ஒரு பாஸிட்டிவ் தன்மையில் அணுக வேண்டும் என்ற நுண்ணிய உணர்வோடு இயக்குநர் செயல்பட்டுள்ளதை புரிந்துகொள்ளமுடிகிறது. அதனாலேயே ஒரு குட் நர்ஸை இனங்காட்டி அதையே படத்தின் தலைப்பாகவும் வைத்துள்ளார். ஆமி லாப்ரன் தனது தூய நட்பைப் பற்றி பேசும் கதை The Good Nurse: A True Story of Medicine, Madness, and Murder என்ற பெயரில் பிரபல இதழில் ஒரு பத்திரிகையாளர் தொடராக எழுதிய உண்மைச் சம்பவங்களின் அடிப்படை புத்தகத்தை மட்டுமே துணையாகக் கொண்டு படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆமி லாப்ரன் என்ற பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உயிரை தன் உயிர் போல நினைத்து தனக்கு இடப்பட்ட பொறுப்புடன் கூடுதலாக பொறுப்புகளை சுமந்து பணியாற்றி வருபவர். ஓர் ஒற்றைத் தாயாக தனது குழந்தைகளையும் தனது வீட்டில் உள்ள தனது வயதான தாயையும் தன்னால் இயன்ற அளவு பேணி பாதுகாத்துக் கொள்கிறார். அவ்வப்போது இதய நோயால் அவதிப்படும் ஆமி தனக்கு ஏதாவது ஒன்று எனும்போது அதைப் பற்றி பெரியதாக அக்கறை எடுத்துக் கொள்ளாதவராகவும் இருக்கிறார்.

தனக்கென்று ஒரு மருத்துவக் காப்பீடு கூட எடுத்துக் கொள்ளாததற்கு பணிநீக்க வாய்ப்பு என்ற நிர்வாக பிரச்சினைகள் என்று காரணமாக கூறப்படுகிறது. நான்கு மாதங்களில் வேலையை விட்ட பிறகு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொண்டு உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளப்போவதாக நண்பர் கல்லனிடம் தெரிவிக்கிறாள். மற்றவர்களை கவனித்துக்கொள்ளும் அவர் தன்னை கவனித்துக்கொள்ள இயலாத நிலையில்தான் இருக்கிறார் என்பதுதான் உண்மை.

இத்தகைய மனச்சிக்கல்களோடு அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் துல்லியமான நடிப்பை, நோயாளிகளுக்கு தேவதையென்றும், குழந்தைகளுக்கு அற்புதமான அம்மாவாகவும், தூய நட்பின் சிறந்த இணையாகவும் ஆமி கதாபாத்திரத்தில் அனாயசியமாக செய்துள்ளார் ஜெஸிக்கா சாஸ்டெய்ன் (Jessica Chastain).

மருத்துவமனையின் திடீர் மரணங்களால் நிர்வாகம் காவல் துறையை அணுகுகிறது. காவல் துறை புலனாய்வு பிரிவின் இன்டர்நல் இன்வெஸ்டிகேஷனுக்கு உதவும்படி மருத்துவமனை நிர்வாகம் ஊழியர்களை கேட்டுக்கொள்கிறது. ரகசியங்கள் காக்கப்படும் என்று கூறி தனித்தனியே விசாரணைகள் நடக்கிறது. விசாரணையின்போது, பேசும் செவிலியர் ஆமி, மரணத்திற்கு காரணம் நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதுதான் என்பதை கண்டறிந்து சொல்லும் காட்சிகளில் திகில் பரவுகிறது. எனினும், வெளியாள் யாரும் வரவில்லை என்பதையும் கூறுகிறாள். கல்லன் மீது உங்களுக்கு சந்தேகம் வருகிறதா என அதிகாரிகள் கேட்கிறார்கள். எனக்கு அப்படி அவர் மீது எந்த சந்தேகமும் கிடையாது. அவர் மிகவும் நல்லவர். அவர் அப்படி செய்யக்கூடியவரல்ல என்பதை என்னால் அழுத்தமாக சொல்ல முடியும் என்கிறாள்.

உண்மையில் உடன் பணியாற்றுபவன் நேர்மையுள்ள உன்னதமான ஒரு நண்பனாகவே அவன் வெளிப்பட்டுள்ளான். அதற்கான காட்சிகள் நிறைய வருகிறது. உதாரணமாக அவளும் ஒரு இதய நோயாளி என்பதால் ஒரு நாள் மயக்கமுற்று முடியாத நிலையில் அவன் தனது செலவிலேயே வேறொரு மருத்துவசோதனையை செய்து அவளை வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுவிட்டுச் செல்கிறான். இதெல்லாம் நல்ல நட்பின் அடையாளங்கள்.

ஆனால், அடுத்தடுத்த மரணங்கள் பிரச்சினையை விசாரணையை தீவிரமாக்குகின்றன. ஒரு கஃபேடேரியாவில் யதேச்சையாக சந்திக்க கிடைத்த பழைய செவிலியர் தோழி மூலம் கல்லன் பற்றி வெளியே வதந்திகள் நிலவுவதாகவும் கூறுகிறாள். அதைப் புரிந்துகொண்ட பிறகுதான் ஆமிக்கு சந்தேகம் தட்டுகிறது. அன்றைய இரவுப் பணியின்போதே உண்மையை கண்டறியும் பணியில் ஈடுபடுகிறாள். வேக வேகமாக வந்து நோயாளிகளுக்கு அவரவர் படுக்கை அருகே இருக்கும் ஸ்டேன்ட்டில் ட்ரிப்ஸ் செலுத்துவதற்காக எடுத்து வைக்கப்பட்ட பைகளுடன் இன்சுலின் இன்ஜெக்ட் செய்யப்பட்ட பைகள் கலந்து வைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.

மட்டுமின்றி, ஒரு நோயாளிக்கு வழக்கமான மருந்துதிரவங்களை ஏற்றும் பைககு பதிலாக இன்சுலின் இன்ஜெக்ட் செய்யப்பட்ட பையை ட்ரிப்ஸ் ஸ்டேண்டில் பொருத்திவிட்டு திரும்புவதை மறைந்திருந்து கண்டுபிடித்து விடுகிறாள். முதல் வேளையாக அவன் நகர்ந்தபிறகு அங்குசென்று அதை அகற்றி மாற்றி வைக்கிறாள்... பின்னர் நடப்பதெல்லாம் அடுக்கடுக்கான கொந்தளிப்புத் தருணங்கள்.

சிறையில் அடைக்கப்படும் வரையில்கூட உண்மையை ஒப்புக்கொள்ளாதவனாகவே கல்லன் இருக்கிறான். இதனால் ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் அவனை விடுவிக்கவே வாய்ப்பு என்ற நிலையில் சிறையில் அதிகாரிகள் நின்றிருக்க அவள் அவனுடைய விலங்குகளை அவிழ்க்கும்படி கேட்டுக்கொள்ள அவ்வாறே செய்கிறார்கள். போலீஸாரின் எச்சரிக்கையை மீறி அருகில் சென்று அவனுக்கு தன்னுடைய அங்கியை நிறைய குளிருதுல்ல என்று அவனுக்கு போர்த்திவிடுகிறாள்.

''நீ எனக்கு ரொம்ப நல்லவன். ஆனால் உன்னுடைய நல்ல விஷயங்கள் எல்லாமே மறந்துவிட்டன. நீதானே அந்தக் கொலைகளை செய்தாய்'' என்று கேட்கிறாள். அதிகாரிகள் முன்னிலையில் முதன்முதலாக தான்தான் செய்ததாக அவன் ஒப்புக்கொள்கிறான். யார் யாரை கொன்றேன் எனவும் சில பெயர்களை சொல்கிறான். 9 மருத்துவமனைகளில் தனது 15 வருடங்களில் 400-க்கும் மேற்பட்டவர்களை அவ்வாறு கொன்றுள்ளான். கொலைகளை செய்ததை ஒப்புக்கொண்ட கல்லன் கடைசி வரை ஏன் செய்தேன் என்பதை அவன் சொல்லவேயில்லை.

2403-வது ஆண்டு வரை அவன் சிறையில் இருக்க, அதாவது 20 ஆயுள் தண்டைனைகளை வழங்கிய நியூஜெர்ஸி மாகாண உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது அவன் நியூஜெர்ஸி நகரத்தின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ஆமி தனக்கு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு தனது பேரக்குழந்தைகளுடன், மகள்களுடன் புளோரிடாவில் வாழ்ந்து வருகிறார்.

உலகின் சர்வதேச திரை விழாக்களில் விருதுகளை அள்ளிய, கடந்த செப்டம்பர் 2022-ல் வெளியான இத்திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

> முந்தைய பார்வை > ஓடிடி திரை அலசல் | Against the Ice - ‘சர்வைவல்’ த்ரில்லர் ஆக ஒரு மீட்புப் போராட்டம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்