பிரசவத்துக்கு இலவசம்’ - ஆட்டோக்களில் இப்படி எழுதிவைத்திருக்கும் சமூக சேவகர்களை பார்த்திருப்போம். ஆனால், பசுமை நேசரான முத்தையா என்ற ஆட்டோ குமார், தனது ஆட்டோ பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி சற்றே வித்தியாசப்படுகிறார்.
ஆட்டோவுக்கு பசுமைக் கூரை
முத்தையா என்ற ஆட்டோ குமாரை இனி ஆட்டோ குமார் என்றே விளிப்போம். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த இவர் பற்றிச் சொல்வதுக்கு முன் இவரது ஆட்டோவைப் பற்றிச் பேசியாக வேண்டும். குமாரின் ஆட்டோவுக்குப் பின்புறம் சின்னதாய் ஒரு அறிவிப்புப் பலகை. அதில் தினம் ஒரு பொன்மொழி ஊருக்கு உபதேசம் சொல்லும். வெயிலின் தாக்கம் தணிக்க இவரது ஆட்டோவின் மேல் கூரையில் கூடுதலாக இன்னொரு தென்னங்கூரை எப்போதும் இருக்கும். இதுமாத்திரமல்ல மக்களே.. ஆட்டோவுக்குள்ளே எப்போதும் குறைந்தபட்சம் ஐந்து மரக் கன்றுகளாவது ஸ்டாக் இருக்கும். ஆட்டோ பயணிகளுக்கு இலவசமாக கன்றுகளை வழங்க இந்த ஏற்பாடு!
இனி, ஆட்டோ குமார் பேசுவார். ’’கண்டபடி மரங்களை வெட்டுவதால்தான் மழை பொய்த்து பூமியும் அதிகம் சூடாவதாக செய்திகளில் படித்தேன். பூமியை குளிர்வித்து மழை பொழியவைக்க நம்மால் முடிந்த தைச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் அப்போதுதான் எனக்குள் உதித்தது. நினைத்த மாத்திரத்தில் உலகத்தையே மாற்றிவிட முடி யாது. ஆனால், முயற்சி செய்தால் நமது ஊரிலிருந்து அந்த மாற் றத்தைத் தொடங்க முடியும். அத்தகைய முயற்சியை நாம் ஒருவராக செய்வதைவிட ஊரோடு கைகோர்த்துச் செய்தால் உரிய பலன் கிடைக்கும் என தீர்மானித்தேன்.
நானே நட்டுவைப்பேன்
எனது எண்ணத்தைச் செயல் படுத்த ஆட்டோவில் மரக் கன்று களை வாங்கி வைத்தேன். எனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு, எதற்காக மரம் வளர்க்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்வேன். அதைக் கேட்டு அவர்கள் பிரியப் பட்டால் மரக் கன்றுகளைக் கொடுப்பேன். பயணிகளை இறக்கி விடும்போது அவர்களின் வீட்டு வாசலில் இடமிருந்தால் அவர்களின் அனுமதியோடு நானே மரக் கன்றை எடுத்து நட்டுவைத்துவிட்டு ஆட்டோவைக் கிளப்புவேன்’’ குளுமையாக பேசினார் ஆட்டோ குமார்.
தொடக்கத்தில் சற்று தயங்கிய சின்னாளபட்டி மக்கள் இப்போது ஆட்டோ குமாரிடம் அப்ளிகேஷன் போட்டு மரக் கன்றுகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். இவரது எண்ணமும் செயலும் ஈர்க்கும்படி இருப்பதால் உள்ளூர் இயற்கை ஆர்வலர்கள் சிலர் மரக்கன்றுகளை தாங்களே வாங்கிக் கொடுத்து ஆட்டோ குமாரின் சுமையைக் குறைக்கிறார்கள். பொதுநலத்துக்கு என்பதால் நர்சரிக்காரர்களும் இவருக்கு மானிய விலையில் மரக்கன்றுகளைத் தந்து மகிழ்விக்கிறார்கள்.
சின்னாளபட்டியும் சோலைவனமாகும்
‘‘குறைந்தபட்சம், எனது ஊரான சின்னாளபட்டியை யாவது பசுமை தேசமாக்க வேண்டும். அதற்காக மரம் நடுவதன் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களுக்கும் மரக் கன்றுகளை வழங்குகிறேன். எதையும் தனி ஒருவனால் சாதிக்க முடியாது ஆனால், மக்கள் நினைத்தால் சீக்கிரமே சின்னாளபட்டியும் சோலைவனமாகும்’’ என்ற ஆட்டோ குமாரின் வார்த்தைகளில் நம்பிக்கை துளிர்க்கிறது.
விடைபெறும் நேரத்தில் தனது விசிட்டிங் கார்டை எடுத்து நம்மிடம் நீட்டினார் ஆட்டோ குமார். எதார்த்தமாக அதை பின்பக்கம் திருப்பிப் பார்த்தால், காஸ் கசிவுக்கு, ஆம்புலன்ஸ் சேவைக்கு, ஆபத்து கால குழந்தைகள் அழைப்புக்கு (சைல்டு லைன்), உளவியல் ஆலோசனைக்கு, தீயணைப்பு துறை, காவல் நிலையம், கண்தானம், ஏ.டி.எம். கார்டை செயலிறக்கம் செய்ய என அவசரத் தேவைகள் அத்தனைக்குமான தொலைபேசி எண்களை அச்சிட்டு விசிட்டிங் கார்டையும் மினி தகவல் பலகை ஆக்கி இருந்தார் ஆட்டோ குமார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago