உத்தரவிடுங்க அண்ணே, உங்க பின்னாலேயே வாரோம்: ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சால் கண் கலங்கிய அழகிரி

By கே.கே.மகேஷ்

மதுரை சத்யசாய் நகரில் உள்ள தயாமகாலில் திங்கள்கிழமை நடைபெற்ற மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில், யாரும் எதிர்பாராத அளவுக்கு ஆதரவாளர்கள் வந்திருந்தனர். தென்மாவட்ட நிர்வாகிகள் அதிகமாகவும், வடமாவட்ட நிர்வாகிகள் குறைவாகவும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், விரும்பியவர்கள் எல்லாம் பேச வாய்ப்பு கொடுத்தார் அழகிரி. ஆட்டோ டிரைவருக்குக்கூட பேச வாய்ப்புத் தரப்பட்டது.

ஜலீல் என்பவர் பேசுகையில், தலைமை உங்களைத்தேடி வரணும்ணே. நீங்க எந்த வியூகம் வகுத்தாலும் உழைக்கத் தயார் என்றார்.

குமரி கபிலன், உங்களுக்காக எதையும் இழப்போம். உங்களைத் தவிர” என்றார். புதுக்கோட்டை நிர்வாகி பேசுகையில், “அண்ணே உங்களோட வீரவாள்களான எங்களை வீசி எறிந்துவிட்டு, எங்கள் மாவட்டத்தில் பெரியண்ணன் அரசு என்ற அட்டக்கத்தியை வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறார்கள். இவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

சுமார் 100 நிமிடத்துக்கும் மேலாக தொடர்ந்து தொண்டர்களின் கருத்துகளை கேட்டார் அழகிரி. உண்மையான உணர்வோடு பேசியவர்களை அருகில் அழைத்துப் பேசினார். ரஜினி மன்ற நிர்வாகி பாலதம்புராஜ் பேசியது:

எங்கள் தலைவர் ரஜினியின் நீண்ட கால நண்பராக இருப்பர் அண்ணன். ஏற்கெனவே அண்ணனின் மகள் கல்யாணத்துக்கு ரஜினி நேரடியாக வந்தார். இப்போது, துரை தயாநிதியின் கல்யாணத்துக்கு ரஜினி, தன் மனைவி, மகள், மருமகனோடு வந்தார். (இப்படி அவர் பேசியபோது குறுக்கிட்ட அழகிரி, ரஜினியின் மனைவி என்று சொல்லாதே, அண்ணி என்று சொல் என்று கட்டளையிட்டார். தொடர்ந்து பேசிய தம்புராஜ்..) பார்த்தீங்களா அண்ணனை, நண்பர்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை அறிந்தவர். ரஜினிக்கும், அண்ணனுக்கும் ஒற்றுமை உண்டு. இருவருமே மனதில் பட்டதை சட்டென்று சொல்பவர்கள்.

கவலைப்படாதீங்க . நாங்க உங்களோடு இருப்போம். 1996 தேர்தலில் இவர்களுக்கு ஓட்டுப்போட்டால் மக்களை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி சொன்னதும், மதுரையில் நாங்கள் அண்ணனோடு சேர்ந்து தி.மு.க. வெற்றிக்கு உழைத்தோம். அதற்குப் பிரதிபலனாக எனக்கு அறங்காவலர் குழு தலைவர் பதவியைத் தந்தார் அண்ணன். உழைப்புக்கு உரிய மரியாதை கொடுப்பவர் அவர்.

அண்ணன் ரஜினியை சந்தித்துவிட்டு வந்த நாளில் இருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணனை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்கிறார்கள். அவர் உத்தரவிட்டால், ரசிகர்கள் எல்லாம் அவர் பின்னால் ஒரே அணியாகத் திரளத் தயாராக இருக்கிறோம் என்றார்.

இந்தப் பேச்சால் அழகிரி கண்கலங்கினார். பின்னர் அவர் பேசும் போது, ரஜினியுடைய ஆதரவாளர்கள் என்னுடைய ஆதரவாளர்கள். பாலதம்புராஜின் பேச்சு என்னை மகிழ்ச்சியில ஆழ்த்தியிருக்கு. அதற்காக அவருக்கு மட்டுமல்ல, அவருடைய நண்பர்களுக்கும் நன்றி என்றார்.

அழகிரியுடன் பேசிய நடிகர் கார்த்திக்!

கூட்டத்தில் அழகிரி இருந்த போது, அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக். இதுபற்றி மு.க.அழகிரி தன் பேச்சில் குறிப்பிட்டார். “இங்கே நான் அமர்ந்திருந்தபோது, நடிகர் கார்த்திக் எனக்கு போன் பண்ணினாரு. மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட பிரதமரிடம் வலியுறுத்தியதற்கு எனக்கு நன்றி சொன்னாரு.

நான்கூட சும்மா சம்பிரதாயமாக பேசுவாரோ என்று நினைத்தேன். ஆனா, உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. அவர் நீண்ட காலமாக என் நண்பராக, விசுவாசியாக இருப்பவர் என்றார் அழகிரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்