நீ
லகிரி மாவட்டத்தில் உள்ள 6 பண்டைய பழங்குடியின மக்களில், ஓவியங்களுக்கு புகழ் பெற்றவர்கள் குறும்பர் இன மக்கள். காலப்போக்கில் பலர் ஓவியக் கலையை கைவிட்டதால், இக்கலை அழிவின் விளம்பில் நிற்கிறது. கோத்தகிரி அருகே கோழிக்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன், பாவியூரைச் சேர்ந்த பாலசுப்ரமணி ஆகிய சிலர் மட்டுமே இக்கலையை முன்னெடுத்து வருகின்றனர்.
கோத்தகிரி தாலுகா சோலூர் மட்டத்துக்கு அருகே உள்ளது பாவியூர் மலை கிராமம். இங்கு 130 ஆதிவாசி குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி கூறும்போது, ‘ஆதிவாசிகளுக்கு ஓவியங்கள் வரையும் பழக்கம் இருக்கு. குகைகள்ல, மலைப் பாறைகள்ல வரைவாங்க. அந்தப் பழக்கம் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு. கோயில் திருவிழா, பண்டிகைன்னா வீட்ல இருக்குற சுவத்துல சித்திரங்கள் வரைவாங்க. எங்க தலைமுறையில ஓவியம் தெரிஞ்ச ஒரே ஆளு கிருஷ்ணன்.
எங்க தாத்தா சொல்லிக் கொடுத்த பழக்கத்துல கிருஷ்ணன் கொஞ்சம் வரைவாரு. இப்போ நான், கிருஷ்ணன், மகள் கல்பனா மூணு பேரும் சேர்ந்து ஓவியங்கள வரையிறோம்” என்றார்.
கொவைக்கல், கும்பதேவா, தேன் எடுத்தல், திருமணம், கொவை மனை, கெதேவா, திருவிழா என ஒவ்வொரு ஓவியமும் குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியலைப் பேசுபவை.
ஓவியம் வரைய பயன்படுத்தும் வண்ணங்கள் இயற்கையானவை. ஓவியங்களை முறையாக பராமரித்தால், அழிவே இல்லை. ஓவியங்களுக்கு பயன்படுத்தும் வண்ணம், வேங்கை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசின். இந்த பிசினை பதப்படுத்தி தண்ணீர் சேர்த்தால் பழுப்பு வண்ணம் கிடைக்கிறது. இவர்களின் பெரும்பாலான ஓவியங்கள் பழுப்பு நிறத்திலானவை.
இலைகளின் பச்சை நிறத்துக்காக சில இலைகளையே பிழிந்து சாறெடுத்து பயன்படுத்துகின்றனர்.
குறும்பரின மக்கள் தங்கள் ஓவியங்களை வர்த்தக ரீதியாக பெரும்தொகைக்கு விற்பனை செய்வதில்லை. சொற்ப விலைக்கே சிலர் வாங்குகின்றனர். இந்நிலையில், இணையம் மூலமாக ஓவியங்களை விற்பனை செய்ய உதவுகிறார் கோத்தகிரியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கண்ணன். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இயற்கையோடு இசைந்து வாழும் பழங்குடியினர் மேம்பாட்டிலும் ஈடுபாடு காட்டுகிறார்.
கண்ணனிடம் பேசும்போது, ‘குறும்பர்கள் தங்கள் ஓவியங்களை சொற்ப விலைக்கு விற்கின்றனர். மிகப் பெரிய ஓவியங்களைத் தவிர, மற்ற அனைத்து ஓவியங்களுக்கும்ரூ.200 முதல் ரூ.300-க்குள்தான் விலை கிடைக்கிறது. கலையின் மதிப்பு அவர்களுக்கே தெரியவில்லை. தங்களின் அன்றாட தேவைக்கு தான் ஓவியங்களை விற்கின்றனர். இவர்களுக்கு உதவ, kurumbapaintings.com என்ற இணையதளத்தை உருவாக்கி, ஓவியங்களுக்கு, அதன் மதிப்புக்கு ஏற்ற விலை கிடைக்க உதவுகிறேன். மேலும், ஓவியக் கண்காட்சிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று, ஓவியங்களை காட்சிப்படுத்தி பிரபலப்படுத்துகிறேன்’ என்றார்.
ஒரு பாரம்பரிய இனத்தின் பாரம்பரியக் கலையைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நவீனத்தை பயன்படுத்தி அவற்றை சந்தைப்படுத்துவதன் மூலமாகவும் இந்த ஓவியங்களைப் பாதுகாக்க முடியும். துணை நிற்போம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
இந்தியா
33 mins ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
கருத்துப் பேழை
27 mins ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago