வீ
ட்டு வாசல் வரைக்கும் ஜல்லிக்கட்டு காளைகளை பராமரித்து வந்த பெண்கள், இப்போது வாடிவாசல் வரை காளைகளை அழைத்து வரத் தொடங்கியுள்ளனர். இனி மாடு பிடி வீரர்களாக களத்தில் இறங்குவதுதான் மிச்சமாக இருக்கும்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி கடந்த ஆண்டு நடைபெற்ற எழுச்சி போராட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டனர். ஏற்கெனவே காளைகளின் மீது பாசம் காட்டும் பெண்களுக்கு இந்தப் போராட்டம் மேலும் ஒரு ஈடுபாட்டைக் கொடுத்தது. அதன் விளைவுதான் காளைகளை பராமரிப்பதுடன் நிற்காமல் ஜல்லிக்கட்டு மைதானத்துக்குள் கம்பீரமாக அழைத்துவருவது வரை மாறியிருக்கின்றனர். மாடு பிடி வீரருக்கு உள்ள அத்தனை மிடுக்கோடு அவர்கள் வலம் வருகின்றனர். பல இடங்களில் வெற்றி பெற்ற தங்களது காளைகளுக்கு அவர்களே களத்துக்குச் சென்று பரிசுகளையும் வாங்குகின்றனர்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த மண்பத்தை கிராமத்தைச் சேர்ந்த சந்தனமேரி திண்டுக்கல் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். மணி, செவளை எனும் 2 காளைகளை வைத்து வளர்க்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவைப் பார்த்து மெய்சிலிர்த்துப்போய் காளைகளை வளர்க்க ஆரம்பித்தவர் இப் போது காளைகளுடன் களத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறார்.
“7 ஊர்கள்ல நடந்த ஜல்லிக்கட்டுக்கு காளைகளை நானே அழைச்சுட்டுப் போனேன். போற இடங்கள்ல எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்குது. முகம் தெரியாத பலரும் என்ன வீரத் தமிழச்சின்னு பாராட்றாங்க. அப்போ எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும். காலேஜூக்கு போற நேரம் தவிர, மற்ற நேரங்கள்ல காளைகளை குளிப்பாட்டுறது, தீவனம் கொடுக்குறது போன்ற வேலைகளை செய்வேன். இன்னும் பல காளைகளை வளர்க்கணும்கிறது தான் என்னோட ஆசை” என்றார் தீர்க்கமாக.
இதேபோல திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமணி மனைவி நிர்மலாவுக்கு சங்கிலி கருப்பு, மருதை வீரன் என 2 காளைகள்தான் குழந்தைகள்.
புள்ளைங்க மாதிரி..
அவர் நம்மிடம் கூறும்போது, “எங்களுக்கு குழந்தைங்க இல்ல. இந்த ரெண்டு காளைங்களத்தான் புள்ளைங்க மாதிரி உசிரா வளர்த்துட்டு வாறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அப்புறம்தான், நானே ஜல்லிக்கட்டுக்கு காளைகளை கூட்டிப் போனேன். இந்த வருஷமும் அலங்காநல்லூர், பாலமேடு, நவல்பட்டுன்னு பல இடங்களுக்கு காளைங்கள கூட்டிட்டு போய் இருக்கேன். போற இடத்துல எல்லாம் எனக்கு நல்ல வரவேற்பு குடுக்குறாங்க. லேடீஸ் அழைச்சுட்டு வந்த காளைன்னு சொல்லி, என்ன காத்திருக்க வைக்காம, என்னோட காளைங்கள முன்னாடியே அவுத்துவிட்ருவாங்க.
போன வருஷம் எம்.புதூர்ல என்னோட காளை ஜெயிச்சதுக்கான பரிசை நானே வாடிவாசல்கிட்ட போய் வாங்கிட்டு வந்தேன். அது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. நான் என் உசிரு இருக்குற வரையும் ஜல்லிக்கட்டுக்கு காளைங்கள கூட்டிட்டுப் போவேன்” என்கிறார் கண்ணில் ஆர்வம் தெறிக்க.
ஆண்கள் மட்டுமே வாடிவாசல் செல்லும் நிலையில், பரிசு பொருளை வாங்க வாடிவாசல் வரை வந்ததே பெருமையாக நினைக்கும் பெண்கள் இனி மாடு பிடி வீரர்களாக களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
உலகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
5 hours ago