பாடத்தைப் புரிந்து படிப்பதற்கான வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்!
மா
ர்ச் மாதத்தில் பொதுத் தேர்வைச் சந்திக்க இருக்கிற 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் படும் இன்னல்கள் அளவில்லாதவை. அரையாண்டுத் தேர்வு முடிந்த உடனேயே அலகுத் தேர்வு, சுழல் தேர்வு, திருப்புதல் தேர்வு எனத் தொடர்ந்து தேர்வு எழுதிக்கொண்டிருப்பதால், பாடத்தைப் புரிந்து படிப்பதற்கான நேரத்தையும், பொதுத் தேர்வுக்கு நன்கு தயார்செய்வதற்கான வாய்ப்பையும் மாணவர்கள் இழக்க நேரிடுகிறது. கடந்த சில கல்வியாண்டுகளுக்கு முன்பெல்லாம், ஆசிரியர்கள் அரையாண்டுத் தேர்வு முடிவைக் கொண்டு, படிப்பில் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து, அவர்களின் மேல் தனிக்கவனம் செலுத்தி, தேர்வு பயம் நீக்கி, எளிதில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி அளிப்பார்கள். திரும்பத் திரும்பத் தேர்வு எழுதிக்கொண்டிருப்பதால், மாணவர்கள் மீது தனிக் கவனமோ, தனிப் பயிற்சியோ வழங்க கால அவகாசம் இல்லாமல்போகிறது. டிசம்பர் மாத வாக்கில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மாணவர்கள் பாடங்களைத் திரும்பப் படிப்பதற்கும், அச்சமயத்தில் தோன்றும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் உகந்த காலமாக இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் நன்கு பயிலக் கூடிய மாணவர்கள்கூடத் தங்கள் சந்தேகங்கள் நீங்காமலேயே தேர்வைச் சந்திக்க வேண்டியுள்ளது. தனியார் பள்ளிகளில் இருந்த இந்தத் தேர்வு முறை, தற்போது அரசுப் பள்ளிகளிலும் பரவிவருவது மாணவர்கள் முழுமையாகக் கற்றலுக்கான வாய்ப்பைப் பறிப்பதுபோல் ஆகும். பொதுத் தேர்வுக்குத் தயார்செய்வதற்கு போதிய கால அவகாசமும், சந்தேகங்கள் நீங்கித் தெளிவுடன் தேர்வைச் சந்திக்கிற வாய்ப்பும் மாணவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர்.
வெந்த புண்ணில் வேல்
அ
ரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 2.44 மடங்கு ஊதிய உயர்வுக்கும், தர வேண்டிய நிலுவைத் தொகைக்கும் ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை ஒருபக்கம், மறுபக்கம் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையையொட்டிப் பயணம் செய்ய இயலாமல் அவதிப்படும் சூழல், இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்ஏல்ஏக்களின் ஊதியத்தை 3.75 மடங்காக உயர்த்த சட்டத் திருத்த மசோதாவைத் துணை முதல்வர் தாக்கல்செய்தது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதுபோல உள்ளது. எம்எல்ஏக்களுக்குத் தொகுதிப் படி, தொலைபேசிப் படி, வாகனப் படி என்று சலுகைப் படிகள் பல உள்ளன. இது இல்லாமல் மருத்துவம், பயணக் கட்டணங்களையும் அரசு வழங்குகிறது. தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையால், கடன் வாங்கியே எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய சூழலில், இந்த உயர்வு இப்போதைக்குத் தேவையா? எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் சிலரும் எதிர்த்தும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் நியமனத்தின் மூலம், என் தந்தை கவிஞர்.கு.மா.பாலசுப்பிரமணியம் சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினராகப் பணியாற்றியபோதும், 1994-ல் அவர் மறைவுக்குப் பிறகு, அவர் மனைவியின் பெயரில் சட்டப்படியாகப் பெற வேண்டிய வாரிசு ஓய்வூதியத்துக்கு நாங்கள் இன்றளவும் உரிமை கோரவில்லை. இது எங்கள் தந்தைக்கு அரசு தந்த கௌரவப் பதவி என்று கருதி, நாங்கள் ஓய்வூதியத்தைப் புறக்கணித்தோம். இன்றைய ஆட்சியாளர்கள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நிதிநிலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் கருத்து.
- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.
‘தி இந்து’ செய்திக்குப் பலன்
ஜ
னவரி 11-ல் ‘தி இந்து’ நாளிதழின் செய்திக்கு எதிரொலியாக மதுரை மேலூர் சாலையில், காவல் துறையால் பேரிகார்டு வைத்த எச்சரிக் கைப் பலகைகளில், இருளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியது விபத்துகளைத் தடுப்பதற்குச் சரியான நடவடிக்கை. நேற்றைய நாளிதழில் செய்திக்கு எதிரொலியாக, குடியிருக்க வீடு இல்லாமல் தொண்டுசெய்த போடியின் பிதாமகள் முருகேஸ்வரிக்குக் குடியிருப்பு கட்டித்தர நகராட்சிக்குத் துணை முதல்வர் உத்தரவிட்டதும் ‘தி இந்து’ நாளிதழுக்குக் கிடைத்த வெற்றி. பிதாமகள் வாழ்க்கையை வசந்தம் ஆக்கிய ‘தி இந்து’வுக்கு நன்றி.
- எஸ்.பரமசிவம், மதுரை.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
14 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
16 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
47 mins ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago