இப்படியும் நடக்கிறது

By செய்திப்பிரிவு

இப்படியும் நடக்கிறது

பெரும் மருத்துவக் கட்டமைப்பும் நிர்வாக இயந்திரமும் கொண்ட ஐரோப்பிய நாடுகளெல்லாம்கூட கரோனாவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. உலகின் மிகப் பெரிய இரண்டாவது மக்கள்தொகையைக் கொண்ட நாமோ இன்னும் அலட்சியமாகவே இருந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணம் இது. ரஷ்யாவிலிருந்து ஒரு மருத்துவர் சமீபத்தில் இந்தியா திரும்பினார். அந்தப் பெண்ணுக்குக் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் ஆகிய அறிகுறிகள் இருந்தன. அவர் நாடு திரும்பியதும் டெல்லியையும் தமிழகத்தையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர்கள் தமிழ்நாட்டின் அவசர உதவித் தொலைபேசி எண்ணான 044-29510500-ஐத் தந்திருக்கிறார்கள். அந்த எண்ணைத் தொடர்புகொள்ள அந்தப் பெண் பல முறை முயன்றிருக்கிறார்; முடியவில்லை. அதன் பிறகுதான் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையை அவர் அணுகியிருக்கிறார். அவருக்கு மூச்சுப் பிரச்சினை ஏதும் இல்லை என்பதால் பரிசோதனை தேவையில்லை என்று அனுப்பியிருக்கிறார்கள். தாய்வான், ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் அதி தீவிர விழிப்பு நிலையில் இருந்து கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றன. நாம் இப்படி இருந்தால் கரோனாவை எப்படி எதிர்கொள்வது?

இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது

ஆரம்பத்தில் கரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதாகத்தான் நம்பப்பட்டிருந்தது. போகப்போகத்தான் மனிதர்களிடமிருந்தும் மனிதர்களுக்கு அது பரவுவது கண்டறியப்பட்டது. இதைக் கண்டறிவதற்குள் பல்லாயிரக்கணக்கானோருக்கு கரோனா பரவிவிட்டது. இப்போது கரோனா தொடர்பாக மருத்துவர்கள் இன்னொரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார்கள். கரோனா தொற்றுக்குள்ளாகும் பத்து பேரில் ஒருவர், கரோனா தொற்றின் அறிகுறியே இல்லாத ஒருவரிடமிருந்து கரோனாவைப் பெற்றிருக்கிறார் என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. கரோனா தொற்றினால் இருமல், காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும். ஆனால், கரோனா தொற்றியும்கூட இந்த அறிகுறிகள் இல்லாமல் சிலர் இருக்கிறார்கள். கரோனா பரவலைத் தடுப்பதில் தொற்றுக்குள்ளானோரைத் தனிமைப்படுத்துதல் மிகவும் முக்கியம். நோய் அறிகுறிகள் கொண்டவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்துதல் எளிது. ஆனால், நோய்த் தொற்றுக்கு உள்ளாகியும் அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்களைக் கண்டறிவது கடினம். அப்படிப்பட்டவர்களால் பத்தில் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. அப்படித்தான் சீனாவிலிருந்து அறிகுறிகள் ஏதுமின்றி ஜெர்மனிக்குச் சென்ற நோய்த் தொற்றாளர் ஒருவரிடமிருந்து ஜெர்மானியத் தொழிலதிபர் ஒருவருக்குப் பரவியது. அவரிடமிருந்து அவருடைய தொழிலாளர்கள் இருவருக்குப் பரவியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று மருத்துவர்கள் மூளையைக் கசக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

காக்க வைக்கப்பட்ட பிரேதம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட 68 வயதுப் பெண்மணி ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கைச் செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது. அங்குள்ள நிகம்போத் கட் மின்தகன நிலையத்தில் அந்தப் பெண்மணியின் சடலத்தை எரிக்க மறுத்துவிட்டனர். பல மணி நேரம் காத்திருந்த பின், முனிசிபாலிடி அதிகாரிகள் வந்து கேட்டுக்கொண்ட பிறகே அவரின் சடலத்தை எரித்திருக்கின்றனர். அந்தப் பெண்மணியின் மகனும் நோய்த் தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை எடுத்துவருகிறார். அதனால், தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாத துயர நிலை அவருக்கு ஏற்பட்டது. கரோனாவால் ஒருவர் இறந்துபோனால், அவருடைய உடலில் கரோனா வைரஸ் வெகு நேரத்துக்கு உயிர் வாழ முடியாது. இதை மருத்துவர்களும் கூறிவருகிறார்கள். இருந்தும், போதிய விழிப்புணர்வின்மையால் அந்த மூதாட்டியின் உடல் காக்க வைக்கப்பட்டிருக்கிறது. இறுதிச் சடங்கில் ஏற்பட்ட இந்தத் தடங்கல் வருத்தமளிக்கும் விஷயம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்