சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
நூறு வயதைத் தாண்டியவர்கள் அதிக அளவில் ஜப்பானில்தான் வசிக்கிறார்கள். மொத்த எண்ணிக்கை 71,238. அவர்களுடைய உணவுப் பழக்கம், ஓய்வறியாத வேலை, எதைச் செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்யும் மனம், உடற்பயிற்சி ஆகியவை இந்த நல்வாழ்வுக்கு முக்கியக் காரணங்கள். இவர்களில் 88.1%, அதாவது 62,775 பேர் பெண்கள். கடந்த ஆண்டைவிட 1,321 பேர் அதிகரிப்பு. ஆடவரில் நூறைத் தாண்டியவர்கள் 8,463. கடந்த ஆண்டைவிட 132 அதிகம். புகுவோகா நகரில் வசிக்கும் கனே டனாகா (116) உலகிலேயே வயது முதிர்ந்த பெண். ஆண்களில் சிதெத்சு வடநபே (112) மூத்தவர். 2018 கணக்குப்படி மகளிரின் சராசரி ஆயுள் 87.32, ஆடவருக்கு 81.25. வரும் மார்ச் மாதம் நூறு வயதை எட்டுவோர் எண்ணிக்கை மட்டும் 37,005.
சாமானியர்களின் வரலாற்றை எழுதும் ‘ஸ்லம் ஜகத்து’
பெங்களூரு குடிசைவாழ் மக்களுக்காகக் குடிசைவாழ் மக்களே நடத்தும் கன்னட மொழிப் பத்திரிகை ‘ஸ்லம் ஜகத்து’. 20 ஆண்டுகளாகத் தொடர்கிறது. மாதந்தோறும் 500 பிரதிகள் அச்சாகின்றன. மொத்தம் 20 பக்கங்கள். பிரதியின் விலை ரூ.10. குடிசைவாழ் மக்களின் பிரச்சினைகள், வெற்றிகள், ஆசைகள் அவர்களுடைய மொழி நடையிலேயே எழுதப்படுகின்றன. அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் தகவல்களும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களும், உதவிகளுக்கு யாரை அணுகுவது போன்ற தகவல்களும் பிரசுரிக்கப்படுகின்றன. இப்பத்திரிகைக்கு இப்போதுதான் ஒற்றை அறை அலுவலகம் கிடைத்துள்ளது. அதுவே சிறிய நூலகமாகவும் பயன்படுகிறது. வரலாறு எழுதுகிறவர்களோ சாமானியர்களை விட்டுவிடுகின்றனர். அதைக் களையும் விதமாகக் குடிசைப் பகுதிகளில் வாழும் சாமானியர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்வதே நோக்கம் என்ற கொள்கையோடு செயல்பட்டுவருகிறது ‘ஸ்லம் ஜகத்து’.
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அமலில் ஒடிஷாவின் தேசிய சாதனை
அரசு நிர்வாகத்தில் சமீப காலமாக சிறப்பாகச் செயல்படும் ஒடிஷா மாநிலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அமலிலும் சாதனை படைத்திருக்கிறது. விவசாயம், தோட்டக்கலை, கிராமப்புற வீடமைப்பு, தரிசுநில மேம்பாடு, கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பு, தோட்டப் பண்ணை, விதைத் தயாரிப்பு, கிராமப்புறப் பண்ணை, வாழ்வாதார மேம்பாடு, மழைநீர் சேகரிப்பு, குட்டைகள் வளர்ச்சி ஆகிய வேலைகளுக்கு இத்திட்டம் பயன்படுத்தப்படுகிறது. பசுமை வேலிகள், ஊட்டச்சத்துக் காய்கறித் தோட்டம், அங்கன்வாடி மையத் தோட்டம், ஊராட்சி நூலகம், பன்மைப் பயன்பாட்டு ஏரிகள், ஊடுபயிர் சாகுபடி, கால்நடைத் தீவன வளர்ப்பு, கால்நடைக் கொட்டகைகள் அமைப்பு, நில மேம்பாடு ஆகிய பணிகளையும் இதில் சேர்த்து வெற்றிகரமாக நிறைவேற்றிவருகிறது ஒடிஷா. 2018-19 நிதியாண்டுக்கான வேலைவாய்ப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டன. எடுத்துக்கொண்ட பணிகளில் 91% பூர்த்தியாகிவிட்டன. மத்திய அரசு நிர்ணயித்த மனித வேலைநாட்கள் இலக்கில் 85% ஒடிஷாவில் எட்டப்பட்டிருக்கிறது. 844.92 லட்சம் மனித வேலைநாட்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
7 hours ago