ஜாலியன் வாலாபாக் படுகொலை: மன்னிப்பு கேட்குமா பிரிட்டன்?

By ந.வினோத் குமார்

இந்தியாவில், சுதந்திரப் போராட்டத்தின்போது நடைபெற்ற ஒவ்வொரு சம்பவமும் வரலாறு. அவற்றில், ரத்தமும் கண்ணீரும் கலந்து இன்னமும் ஈரம் காயாமல் இருக்கும் ஒரு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டை எட்டவிருக்கும் அந்தச் சம்பவம், கடந்த சில மாதங்களாகத் தனக்கான நியாயத்தைப் பெறுவதற்கு, குரலை எழுப்பிவருகிறது.

1919-ல் இயற்றப்பட்ட ரெளலட் சட்டம், அன்றைய வைஸ்ராய் ஆட்சிக்கு, அளவு கடந்த அதிகாரங்களை அளித்தது. போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியவும், பத்திரிகைகளை மெளனமாக்கவும், பிடி ஆணை எதுவும் இல்லாமல், சந்தேகிக்கப்படும் தனிநபர்களைக் கைது செய்யவும் விசாரணை ஏதுமின்றிச் சிறையில் அடைக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்தது. இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்களுக்கு, சட்ட உதவி பெறுவதற்கான உரிமையைக்கூட இந்தச் சட்டம் தரவில்லை.

பஞ்சாபில் இச்சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சைபுதீன் கிச்சுலு, சத்யபால் ஆகிய தலைவர்கள் ஏப்ரல் 9-ல் முன்னறிவிப்பு இல்லாமல் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, வன்முறை வெடித்தது. அமிர்தசரஸ் மக்கள் காவல் நிலையத் தலைமையகம் நோக்கிச் சென்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ல், ப்ரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் தலைமையில் சுமார் 600 ராணுவ வீரர்கள் அந்நகரத்துக்கு அனுப்பப்பட்டனர். முறையான அனுமதியின்றிப் போராட்டம் நடத்தக் கூடாது என்ற உத்தரவை ஏப்ரல் 13-ல் ஜெனரல் டயர் பிறப்பித்தார்.

இந்த உத்தரவைப் பற்றித் தெரியாத, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர், ‘பைசாகி’ திருவிழாவைக் கொண்டாட அமிர்தசரஸ் நகரத்துக்கு வந்தனர். அங்கு, பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் எனும் இடத்தில் அவர்கள் திரண்டனர். அது என்ன நிகழ்ச்சி என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள விரும்பாத டயர், அந்த மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்காமல், துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டார். சுற்றிலும் சுவர்கள் கொண்ட அந்த இடத்திலிருந்து மக்களால் தப்பிக்க முடியவில்லை. அந்த இடத்தின் குறுகிய வாயிலும் காவலர்களால் அடைக்கப்பட்டுவிட்டது. சுமார் 1,650 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 379 பேர் இறந்தனர். 1,137 பேர் காயமடைந்தனர். இது அரசின் கணக்கு. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்தப் படுகொலையை எதிர்த்துப் பல்வேறு கண்டனங்கள், போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்க, ஜெனரல் டயருக்கோ விருதுகள் வழங்கி அழகு பார்த்தது வெள்ளையர் ஆட்சி.

மீண்டெழுந்த வரலாறு

ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் கடந்த சில மாதங்களாகப் பொதுவெளியில் மீண்டும் பேசப்பட்டுவருகிறது. அதற்குக் காரணம், 2015 மே மாதம்

‘ஆக்ஸ்போர்டு யூனிய’னில் நடந்த விவாதத்தில் சசி தரூர் நிகழ்த்திய உரை. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு செய்த கொடுமைகளைப் பட்டியலிட்ட அவர், ‘இந்தக் கொடுமைகளுக்காக பிரிட்டிஷ் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்தியாவை அது 200 ஆண்டுகள் ஆட்சிசெய்தது. எனில், ஆண்டுக்கு ஒரு பவுண்ட் வீதம் சுமார் 200 பவுண்டுகள் தர வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து, சசி தரூர், தன் உரையை விவரித்து எழுத, அது கடந்த ஆண்டு ‘என் எரா ஆஃப் டார்க்னெஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. அதில், ஹிட்லர் காலத்தில் நடைபெற்ற நாஜி கொடுமைகளுக்காக 1970-ல், ஜெர்மனியின் அதிபராக இருந்த வில்லி ப்ராண்ட், வார்சா கெட்டோ எனுமிடத்தில் போலந்து யூத மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதையும், 2016-ல் கோமகாட்டா மாரு சம்பவத்துக்காக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் த்ரூதோ, கனடா வாழ் சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டதையும் குறிப்பிட்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்காக பிரிட்டனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

கோமகாட்டா மாருவின் கண்ணீர்

கோமகாட்டா மாரு சம்பவத்தைப் பற்றி, இந்தியர்கள் பலருக்கும் தெரியாது. 1914 மே 23-ல் பாபா குர்தித் சிங் எனும் வணிகரின் தலைமையில், 376 இந்தியர்களுடன் ‘கோமகாட்டா மாரு’ எனும் கப்பல் கனடாவின் வான்கூவரை வந்தடைந்தது. ஆனால், அந்தக் கப்பலில் இருந்த பயணிகளைக் கரையில் கால் வைக்க வெள்ளையர் அரசு, அனுமதிக்கவில்லை. கனடாவில் ஏற்கெனவே இருந்த வெள்ளையர்கள் இந்தியர்களின் இந்தக் குடியேற்றத்தை எதிர்த்தார்கள். கப்பலில் உணவுப் பொருட்கள் தீர்ந்துபோக, பயணிகள் பசியால் வாடினர். 376 பேரில், 20 பேர் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும், அவர்களின் முன்னோர் அந்த நாட்டில் இருந்ததால்தான், அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. கரை இறங்குவதற்கான எல்லா முயற்சிகளும் தோற்றுவிட, அந்த வருடம் ஜூலை மாதம் 23-ல், அந்தக் கப்பல் வந்தவழியே திரும்பியது.

கோமகாட்ட மாரு செப்டம்பர் 29-ல், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ‘பட்ஜ்-பட்ஜ்’ எனும் இடத்தை வந்தடைந்தது. கொல்கத்தாவை அடைய கொஞ்சம் தொலைவே இருந்த சமயத்தில், பயணிகளைக் கீழிறக்கி, ரயில் மூலமாக அவர்களைப் பஞ்சாபுக்கு அனுப்பத் திட்டமிட்டது அரசு. அவர்களைக் கொல்கத்தாவில் இறங்க அனுமதித்தால், அவர்களின் கஷ்டத்தை அறிந்த மக்கள், கலவரத்தில் ஈடுபடுவார்களோ என்று அஞ்சியது வெள்ளையர் அரசு. பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கப்பலிலிருந்து இறங்கி கல்கத்தாவுக்குள் பேரணியாகச் செல்ல முயன்றனர். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிடப்பட்டது. அதில் 19 பேர் இறந்தனர். 21 பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் மிக முக்கியப் பங்காற்றியவரின் பெயரும் டயர் என்பது வரலாற்றின் புதிர்களில் ஒன்று. சர் மைக்கேல் பிரான்ஸிஸ் ஓ’டயர் என்பவர் அப்போது பஞ்சாபின் கவர்னராக இருந்தார். ஜெனரல் டயரின் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நியாயப்படுத்தியவரும் இவரே.

கனடா வழிகாட்டுகிறது

கோமகாட்டா மாரு சம்பவம், கனடா வாழ் இந்தியர்களின் மனதில் இருக்கும் ஆழமான காயம். 1989-ல் இந்தச் சம்பவத்தின் 75-ம் ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தச் சம்பவத்துக்காக கனடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 1997-ல் இதற்கான கோரிக்கையை, கனடா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக குர்மந்த் சிங் க்ரெவால் எழுப்பினார். தொடர்ந்து 2008 ஆகஸ்ட் 3-ல் ‘கத்ரி தியாகிகள்’ எனும் சீக்கியர் விழாவில் அன்றைய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்பதாகக் கூறினார்.

ஆனால் இந்தியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மன்னிப்பு, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட கனடா, இந்தியாவிடமும் தனது நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கருதியதில் நியாயம் இருந்தது.

கடைசியில், 2016 மே 18-ல் கனடா நாடாளுமன்றத்தில், பிரதமர் ஜஸ்டின் த்ரூதோ, கோமகாட்டா மாரு சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார். அதுபோல, இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டு காணவிருக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்கு, பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ‘பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர், ஜாலியன் வாலாபாக்குக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்கிறார் சசி தரூர். அல்லது, குறைந்தபட்சம், அந்தச் சம்பவத்தை பிரிட்டனின் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்கிறார் அவர்.

இந்த இரண்டில் எது நடக்குமென்று தெரியவில்லை. ஆனால், பிரிட்டன் மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும், பிறரை மன்னிக்கும் குணம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால், நாம் இந்தியர்கள்!

ந.வினோத்குமார்

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

ஏப்ரல் 13: ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்