காலில் சக்கரம் கட்டியவர்கள்!

By கே.என்.ராமசந்திரன்

7ஆர் என்ற ஜீனைச் சில விஞ்ஞானிகள் ‘சாகச ஜீன்’ என்று குறிப்பிடுகிறார்கள்

ஒரு கட்டைச் சுவரைப் பார்த்தால் பல சிறுவர்கள் அதனருகில் சென்று, அதன் மறுபுறத்தில் என்ன இருக்கிறது என்று ஆவலுடன் எட்டிப் பார்ப்பார்கள். பல பெரியவர்களுக்கும் அந்த நப்பாசை இருக்கும். கூச்சம் அவர்களைத் தடுத்துவிடும். கொலம்பஸுக்கு அதை விடப் பெரிய அளவிலான நப்பாசை இருந்தது. அட்லான்டிக் கடலின் மறுகரையில் இந்தியாவுக்குப் போக வழியிருக்கிறதா என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டது.

அதேபோல கேப்டன் குக் என்ற ஆங்கிலேய மாலுமிக்குப் பசிபிக் கடலின் தென்கோடியில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் உண்டாயிற்று. 1769-ல் அவர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்தபோது பாலினேசிய (ஹவாய்) தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த டுப்பையா (Tupiah) என்ற பூசாரியைச் சந்தித்தார். டுப்பையா அவருக்கு ஒரு தேசப் படத்தைப் பரிசளித்தார். அதில் பசிபிக் தீவின் தென் பகுதியில் இருந்த எல்லாத் தீவுகளும் குறிக்கப்பட்டிருந்தன.

திசை காட்டிய விண்மீன்கள்

டுப்பையாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வழிகாட்டச் சொன்னார் குக். அவர் எந்தவிதமான கருவியின் துணையும் இல்லாமல் 300 மைல் தெற்கிலிருந்த ஒரு தீவுக்குக் குக் குழுவினரை அழைத்துச் சென்றார். அங்கிருந்து வேறு பல தீவுகளுக்கும் அவர்கள் சென்றனர். இரவு, பகல் எந்த நேரத்திலும் விண்மீன்களின் துணை கொண்டு டஹிட்டி தீவு இருக்கும் திசையை அவர் சரியாகச் சுட்டிக்காட்டி குக் குழுவினரை அசர வைத்தார்.

டுப்பையாவின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் வசித்த ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே அவர்கள் தக்கைத் தண்டுகளாலான பெரிய படகுகளில் பயணித்துத் தென் பசிபிக் கடலிலிருந்த எல்லாத் தீவுகளிலும் போய்க் குடியேறிவிட்டார்கள். அத்துடன் எந்தவிதக் கருவியின் உதவியுமின்றி, அங்கிருந்த எந்தவொரு தீவுக்கும் செல்லக்கூடிய கடல் பாதைகளை மனதில் பதிய வைத்துக்கொண்டார்கள்.

அவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து 2,300 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்டு நீண்ட கடல் பயணத்துக்குப் பின்னர் பசிபிக் தீவுகளுக்கு வந்தவர்கள். அதற்கும் 70,000 முதல் 50,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவின் கரைகளிலிருந்து பல திசைகளிலும் கடலில் பயணம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். கிழக்குத் திசையில் பயணித்துப் பல நாடுகளைக் கடந்து, இறுதியாக பசிபிக் தீவுகளை அடைந்தார்கள். கேப்டன் குக் மேற்குத் திசையில் பயணித்து அங்கே போய்ச் சேர்ந்தார். அங்கே நிகழ்ந்த ஒரு சச்சரவில் அவர் கொல்லப்பட்டார்.

காரணம் என்ன?

ஓரிடத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே எப்பாடுபட்டாவது மனிதர்கள் அங்கே போகிறார்கள். வேறு எந்த உயிரினத்துக்கும் இந்தக் குணம் கிடையாது. மனிதர்கள் மட்டுமே எல்லை தாண்டுகிறார்கள். இருக்குமிடத்தில் எவ்வளவு வளம் இருந்தாலும் புதிய இடங்களுக்குப் போகிறார்கள். இது ஓர் சமீபகால நிகழ்வு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நியாண்டர்தால் மனிதர்கள் தங்களுடைய இடத்தைவிட்டு வெளியேறிப் பரவவில்லை. கடந்த 50,000 ஆண்டுகளில்தான் நவீன மனித இனம் உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போய்க் குடியேறிவிட்டது. எது அதற்குத் தூண்டுகோலாயிருந்தது?

மனித மூளையிலுள்ள டோப்பாமைன் (Dopamine) என்ற வேதி கற்றல், அதனால் ஏற்படும் இன்பம் ஆகியவற்றை ஆளுகிறது. அதை டி.ஆர்.டி.-4 என்ற ஜீன் இயக்குகிறது. சில மனிதர்களில் அது டி.ஆர்.டி. 4-7ஆர் என்ற வகையாகத் திரிகிறது. அவ்வாறானவர்கள் மொத்தத்தில் 20 சதவீதத்தினரே. அவர்களுக்குத் துறுதுறுப்பும், ஆராய்வதில் ஆர்வமும் மிகுந்திருக்கும். அவர்கள் துணிந்து செயல்படுவர்; ஆபத்துகளை எதிர்கொள்வர். போகாத இடங்களுக்கெல்லாம் போவார்கள்; புதிய அனுபவங்களைத் தேடுவர். இயக்கம், மாற்றம், சாகசம் ஆகியவையே அவர்களது இலக்குகள். மற்றவர்களைவிட அதிகமாகச் சாப்பிட்டு, அதிக உடல் வலுவுடன் இருப்பார்கள். ஊர் சுற்றாமல் ஒரே இடத்தில் தங்கி வசிக்கத் தொடங்கிவிட்டால் வலுக் குறைந்து போவார்கள்.

7ஆர் என்ற ஜீனைச் சில விஞ்ஞானிகள் ‘சாகச ஜீன்’என்று குறிப்பிடுகிறார்கள். அதற்காக அந்த ஜீனை உடைய எல்லோரும் சாகசச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் சொல்ல முடியாது. அவ்வாறு சாகசம் செய்வோரில் பலருக்கு அந்த ஜீன் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். அது மூளையிலும், கைகால்களை வலுவாக்குவதிலும் செயலாற்றுகிறது. சாகசச் செயல்புரிய இவை இரண்டும் அவசியமானவை. அதன் காரணமாகவே நீண்ட தூரம் நடக்கவும், ஓடவும் கைகளைக் கொண்டு காரியம் செய்யவும் முடிகிறது. மூளைக்கும் கை கால்களுக்கும் இடையில் ஒரு செய்தித்தொடர்பு கண்ணி உள்ளது. அதில் சதா சர்வகாலமும் செய்திகள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டேயிருக்கின்றன. மூளை திட்டமிடுகிறது. கை கால்கள் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இதுவே மனிதன் இன்றைய வளர்ச்சியை அடைய உதவியுள்ளது.

வேட்டையாடு விளையாடு

பெரிய அளவிலான மூளையும் திறமையான கைகளும் வளமான கற்பனைத் திறத்துக்கு வழிவகுத்தன. மனிதக் குழந்தைக்குப் பெற்றோரின் நிழலில் இருந்தவாறே புதிய சோதனைகளைச் செய்து, புதிய அனுபவங்களைப் பெற உதவும் நீண்ட கால அவகாசம் கிடைக்கிறது. கொரில்லாக்களும், சிம்பன்சிக்களும் நாலு அல்லது ஐந்து வயதில் பெற்றோரை விட்டு விலகிவிடுகின்றன. நியாண்டர்தால் காலத்தில்கூட மனிதக் குழந்தைகள் 10 முதல் 12 வயது வரையிலான காலத்தில் பெற்றோரிடமிருந்து விலகிவிட்டன.

விலங்குக் குட்டிகளும் பறவைக் குஞ்சுகளும் விளையாடுவதன் நோக்கம் வாழ்வதற்கான பயிற்சிகளைப் பெறுவதே. அது முக்கியமாக வேட்டையாடும் திறனைக் கூர் தீட்டுவதாகவே இருக்கும். மனிதக் குழந்தைகள் கற்பிதமான சூழ்நிலைகளையும் விதிகளையும் கொண்ட விளையாட்டுகளை விளையாடும். வயதாக வயதாக இவ்வாறான சிந்தனைகள் குறைகின்றன. புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு உணவு விடுதிக்குப் போவதைவிட பழகிய, வாடிக்கையாகப் போகிற ஓட்டலுக்கே போகலாமென்று தோன்றுகிறது. குழந்தைப் பருவத்தில் தேடல், புதுமை விரும்பல், அறிய நாட்டம் போன்றவற்றுக்கான இணைப்புகள் மூளையில் உருவாகின்றன. இம் மாதிரியான இளமையில் கற்றல்கள், பெரியவர்களான பின் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றிக்கொள்ள உதவுகின்றன. தேடல் மற்றும் புதுமை விரும்பல் நாட்டங்கள் குறைகின்றன. பல இடங்களுக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஊர் சுற்றுகிற ஆர்வமும் குறைந்துவிடுகிறது.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

தொழில்நுட்பம்

52 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்