ராஜ குடும்பத்தவருக்குப் பாத்தியப்பட்ட காளஹந்தி
ஒடிஷாவின் காளஹந்தி மக்களவைக்குத் தனிச் சிறப்புண்டு. என்னதான் ஜனநாயகம் வளர்ந்திருந்தாலும், வறுமை இன்னும் வாசலைவிட்டு வெளியேறாமலேயே ஏழைகள் திண்டாடினாலும் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான செல்வாக்கு காளஹந்தியில் இன்னும் நீடிக்கிறது. ஏற்கெனவே மூன்று முறை உறுப்பினராக இருந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ், பாஜக மாநிலத் தலைவர் பசந்த் பாண்டா, பிஜு ஜனதா தளத்தின் ராஜ குடும்ப வாரிசு புஷ்பேந்திர சிங் தேவ் ஆகியோர் இம்முறை போட்டியிடுகின்றனர். இதுவரை 16 முறை நடந்த தேர்தல்களில் அரச குடும்பத்தவர்கள் 9 முறை வென்றுள்ளனர். பக்த சரண் தாஸ் 7 முறை வென்றுள்ளார். பிரதமர் மோடி, ராகுல் காந்தி முதல் முதலமைச்சர் நவீன் பட்நாயக் வரை இத்தொகுதியைச் சுற்றிவந்துவிட்டார்கள். 2017 உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த அபார வெற்றியால் காளஹந்தியை வெற்றிக்குரிய தொகுதியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது பாஜக. ஏழு முறை வென்ற காங்கிரஸா, பாஜகாவா அல்லது ராஜ குடும்ப வாரிசான புஷ்பேந்திரவா? காளஹந்தியை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இளையோரும் பாஜகவும்!
சிஎஸ்டிஎஸ் எனும் அமைப்பு 19 மாநிலங்களில் 101 தொகுதிகளில் 10 ஆயிரம் பேரிடம் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. ‘நாடு சரியான திசையில்தான் செல்கிறதா?’ என்ற கேள்விக்குத் தென்னிந்தியாவைச் சேர்ந்த 45% பேர், தவறான திசையில் செல்வதாகக் கூறியுள்ளனர். கிழக்கு, மேற்கு-மத்தியம், வடக்கு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை முறையே 21%, 23%, 22% ஆக இருக்கிறது. தவறான திசையில் செல்வதாக அதிகம் கருதுகிறவர்கள் தென்னிந்தியர்களே! ‘மோடி அரசுக்கு இன்னொரு வாய்ப்பு தரலாமா?’ என்ற கேள்விக்கு இந்துக்களில் 49% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது முஸ்லிம்களில் 56%, கிறிஸ்தவர்களில் 62%, சீக்கியர்களில் 68% ஆக இருந்தது. மே 2018 முதல் மார்ச் 2019 வரையில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்திருப்பது 18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்களிடம்தான். கடந்த 2018 மே மாதம் இந்த வயதுப் பிரிவில் 33% பாஜகவை ஆதரித்தனர், 2019 மார்ச்சில் இது 40% ஆக உயர்ந்திருக்கிறது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பாஜகவால், குறிப்பாக மோடியால் ஈர்க்கப்படுவதாக ஆய்வு கருதுகிறது.
வெளிவரும் லாலுவின் கதை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு கிடைக்க அன்றைய பிரதமர் வி.பி.சிங்குக்கு நான்தான் ஆலோசனை கூறினேன் என்று ‘கோபால்கஞ்சிலிருந்து ரெய்சினாவுக்கு: எனது அரசியல் பயணம்’ எனும் நினைவுக்குறிப்பில் பதிவுசெய்திருக்கிறார் லாலு பிரசாத். “தேசிய முன்னணி அரசில் வி.பி.சிங் பிரதமராகவும் தேவிலால் துணைப் பிரதமராகவும் இருந்தனர். இருவருக்கும் இடையே இருந்த மோதல்களால் வரும் விளைவுகளைச் சுட்டிக்காட்டி தேவிலாலை பதவியிலிருந்து நீக்கிவிடுங்கள் என்றேன். ‘ஜாட்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவராக தேவிலால் இருப்பதால் என்னை அவர்களுக்கு எதிரானவராகப் பிரச்சாரம் செய்வாரே’ என்று அச்சப்பட்டார் வி.பி.சிங். அப்போது, கிடப்பில் கிடக்கும் மண்டல் கமிஷனை அமல்படுத்துங்கள் என்று நான்தான் ஊக்கமளித்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் லாலு. வட இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிய வரலாற்று நிகழ்வுகளின் புதிய பக்கங்களை லாலு வெளிப்படுத்தியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
ஓடிடி களம்
44 mins ago
தமிழகம்
23 mins ago
வணிகம்
56 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
26 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago