புயலில் பனை மரங்கள் தாக்குப்பிடித்தது எப்படி?

By ப.கோலப்பன்

கஜா புயலின்போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், பனை தவிர பிற வகை மரங்கள், தொலைத்தொடர்புக் கோபுரங்கள், மின்கம்பங்கள் வேருடன் சாய்ந்த நிலையில், வீடுகளின் கூரைகள் பிய்த்துக்கொண்டு போன நிலையில், புயலின் வேகத்தை எதிர்கொண்டு ஆயிரக்கணக்கான பனை மரங்கள் விழாமல் தாக்குப்பிடித்திருக்கின்றன.

இதுபோன்ற தீவிரமான பருவநிலை நிகழ்வுகளின்போது, பனை மரங்களால் எப்படித் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று விளக்குகிறார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தாவரவியல் துறையின் முன்னாள் தலைவர் எம்.நரசிம்மன். “பனை மரங்கள் தாக்குப்பிடித்து நிற்பதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உண்டு. முதலாவது, பனை மர வேரின் அமைப்பு. பனை மர வேர் நார்த்தன்மை கொண்டது என்றாலும், அதன் சுவாசத் திறன் அதிகம். இரண்டாவதாக, பனை மரத் தண்டின் நாள அமைப்பு அதை இலகுவானதாக வைத்திருக்கிறது. மூன்றாவதாக, மரத் தின் உச்சிப் பகுதி. மடங்கிய இலைகளும், அதன் அமைப்பும் வலுவான காற்றையும் தாக்குப்பிடித்து நிற்க உதவுகிறது” என்கிறார் அவர்.

கஜா புயலில் பனை மரங்கள் அனைத்தும் தப்பிவிட்டன என்று சொல்ல முடியாது. சில மரங்கள் விழுந்திருக்கின்றன. ஆனால், தென்னை மரங்களை இரண்டு மூன்று துண்டுகளாக உடைத்தெறிந்த புயல் காற்றால், அதேபோன்ற சேதத்தைப் பனை மரத்திடம் ஏற்படுத்த முடியவில்லை. தமிழகத்தின் மாநில மரமான பனை, பழங்காலத்தில் சேர மன்னர்களின் அதிகாரபூர்வ மரமாக இருந்தது.

“தலைக்கனம் இல்லாவிட்டால் எதையும் சமாளிக்கலாம் என்பார்கள். பனை மரத்தைப் பொறுத்தவரை, அதன் தலைப் பகுதி கனமானது அல்ல. 2011-ல் தானே புயலின்போதுகூடப் பனை மரங்கள் தாக்குப்பிடித்து நின்றதைப் பார்த்திருக்கிறேன்” என்கிறார் நரசிம்மன். பனை மரங்களின் தாங்கும் தன்மை, அந்த மரங்கள் அதிகமாக வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. “எங்கெல்லாம் பனை மரங்கள் வளர்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும். ஏனெனில், பனை மரத்தின் வேர்கள் மிக ஆழமாக ஊடுருவக்கூடியவை” என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

“பனை மரத்தின் உச்சிப் பகுதி, தண்டுப் பகுதி, வேர்ப் பகுதி ஆகியவற்றின் தனித்தன்மைகள், பேரழிவுகளைத் தாங்கும் வலிமையை அம்மரத்துக்கு அளிக்கின்றன” என்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறைத் தலைவர், டாக்டர் பி.ரவிச் சந்திரன். பனை மரம் தொடர்பாக விரிவான ஆய்வுகளை நடத்தியவர் அவர். தென்னை மரங்களில் இருப்பதைப் போல், பனை மரங்களின் தலைப் பகுதி கனமாக இருக்காது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“பனை மரத்தின் வேர்கள், நார்த்தன்மை கொண்டவை. ஐந்தடி சுற்றளவில் படர்ந்திருக்கும் பனை மர வேர்கள், நிலத்துக்குள் 5 முதல் 10 அடி ஆழம் வரை ஊடுருவியிருக்கும். எனவே, பனை மரம் அத்தனை எளிதில் வேரோடு சாய்ந்துவிடாது” என்கிறார் அவர். பனை மரம் ஒற்றைத்தன்மை இல்லாத மரம் என்று சொல்லத்தக்க வகையில், அதன் எடை, வலிமை, கடினத் தன்மை ஆகியவை மாறும் தன்மை கொண்டவை என்று குறிப்பிடுகிறார் டாக்டர் ரவிச்சந்திரன்.

நார்த்தன்மை கொண்ட நாளத் தொகுப்பு கொண்டதன் காரணமாக, பனை மரத்தின் உடற்பகுதியின் வெளிப்புறச் சுவரை நோக்கிச் செல்லச் செல்ல மரத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. பின்னர், அது படிப்படியாக நெகிழ்வுத்தன்மையை அடைகிறது. பனை மரத்தின் வெளிப்புற அடுக்கு கடினத்தன்மை கொண்டதாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் இருப்பதால், எத்தனை வேகம் கொண்ட காற்றையும் தாங்கி நிற்கும். எளிதில் முறியாது” என்கிறார் அவர்!

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: வெ.சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

50 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்