ராமதாஸ்: ஐந்து மைல்கற்கள்!

By வெ.சந்திரமோகன்

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு! :

தமிழகத்தில் சமூக, பொருளாதாரத் தளங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்த வன்னியர் உள்ளிட்ட சமூகங்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேயே இருந்துவந்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீட்டில் அவர்களுக்கான இடம் கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருந்தது. ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் 1980-களில் முன்னெடுத்த போராட்டங்கள்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவையும், 20% உள்ஒதுக்கீட்டையும் திமுக அரசு அறிவிக்க வழிவகுத்தன.

சமச்சீர்க்கல்வி!

சமநிலைச் சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கான அடித்தளம் கல்வியிலிருந்து அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சமச்சீர்க்கல்வியைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தது பாமக. இதற்காக 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களையும் அக்கட்சி நடத்தியது. “தாய்மொழியான தமிழ் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் பயிற்றுமொழியாக இருந்தால் மட்டுமே சமச்சீர்க்கல்வி நிறைவடையும்” என்று ராமதாஸ் தொடர்ந்து பேசிவந்தார். இதற்கான தடைகள் உருவானபோது உச்ச நீதிமன்றம் வரை செல்லவும் பாமக தயங்கவில்லை. 2006 சட்ட மன்றத் தேர்தலில் இதைத் தனதாக்கிய திமுக, 2010-ல் சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்தது. சமச்சீர்க்கல்வி அமல்படுத்தப்பட்ட வடிவத்தில் ராமதாஸுக்கு உடன்பாடில்லை என்றாலும், படிப்படியாக மாற்றம் கொண்டுவருவதாக அப்போதைய முதல்வர் கருணாநிதி கொடுத்த வாக்குறுதியை அவர் ஏற்றுக்கொண்டார்.

வேளாண் நிழல் அறிக்கை!

இதுவரை ஆட்சிக் கட்டிலில் அமராத கட்சி என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, பாமக சார்பில் ஒரு நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். 2003-04 முதல் இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது பாமக. 2008 முதல் வேளாண் துறைக்கென தனியாகவும் நிழல் நிதிலை அறிக்கையை அக்கட்சி வெளியிட்டுவருகிறது. இதுவரை பாமக சார்பில் 15 பொது நிழல் நிதி நிலை அறிக்கைகளும் 10 வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பிரச்சினைகளைச் சுட்டுவதோடு அல்லாமல், ‘வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களையும் இலவசமாக வழங்குதல், விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்குதல், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதுடன், பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய கடன் சுமையிலிருந்தும் அவர்களை விடுவித்தல்’ என ஆக்கபூர்வமான யோசனைகளை அரசுக்கு வழங்குவதிலும் வல்லவர் ராமதாஸ்.

உயர் கல்வியில் 27% இடஒதுக்கீடு!

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது பாமகவின் முக்கிய சாதனைகளில் ஒன்று. 2008-ல் ஐக்கிய முற்போக்குகூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸ், இதற்காக காங்கிரஸ் தலைவர்களிடமும் கூட்டணிக் கட்சியினரிடமும் போராடி இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததிலும் பாமகவின் பங்கு முக்கியமானது.

108 ஆம்புலன்ஸ்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியின்போது, அன்புமணி ராமதாஸ் அமைச்சரானார். மகனிடம் தந்தை ராமதாஸ் சொன்னது, “பணக்காரர்களுக்கான சுகாதார வசதி ஏழைகளுக்கும் உருவாக்கப்பட வேண்டும்.” தேசிய ஊரக சுகாதார இயக்கம் உருவாக வழிவகுத்தார் அன்புமணி ராமதாஸ். இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகத்தான் புகழ்பெற்ற ‘108 அவசர ஊர்தி’ திட்டம் அறிமுகமானது. இன்று லட்சக்கணக்கானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட இரு ராமதாஸ்களும் ஒரு காரணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

22 mins ago

சுற்றுலா

34 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்