ஓவியர் பாமுக்
துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக், கொள்ளைநோய் பற்றி ‘நைட்ஸ் ஆஃப் பிளேக்’ என்ற நாவலை நான்கு ஆண்டுகளாக எழுதிவருகிறார். இது சமீப காலமாக இலக்கிய வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் விஷயம். இதில் புதிய தகவல் என்னவென்றால் ஓரான் பாமுக் வரைந்த ஓவியங்களும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன என்பதுதான். இதற்கு மருத்துவப் புத்தகங்கள்தான் தனக்கு உந்துதல் என்கிறார் பாமுக். இந்த விஷயத்தில் அவருக்கு முன்னோடியாக குந்தர் கிராஸைச் சொல்லலாம். 1986-87 ஆண்டுவாக்கில் குந்தர் கிராஸும் அவரது மனைவியும் கல்கத்தாவில் ஆறு மாத காலம் இருந்தார்கள். அந்த அனுபவங்கள் குறித்து குந்தர் கிராஸ் எழுதிய ‘ஷோ யுவர் டங்’ (உங்கள் நாக்கைக் காட்டுங்கள்) என்ற புத்தகத்தில் அவரது ஏராளமான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். குந்தர் கிராஸ், ஓரான் பாமுக் இருவரும் நோபல் பரிசு பெற்றவர்கள் என்பது அவர்களுக்கு இடையேயுள்ள இன்னொரு ஒற்றுமை.
ஈழத் தமிழர்களின் ‘தாய்வீடு’
இலங்கையின் போர்ச்சூழல் காரணமாக ஈழத் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறும் போக்கு தொடங்கி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகின்றன. கனடாவில் மட்டும் இப்போது நான்கு லட்சம் ஈழத் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்காக உருவானதுதான் ‘வீடு’ இதழ். பி.ஜெ.டிலிப்குமாரை ஆசிரியராகக் கொண்டு 2003-ல் தொடங்கப்பட்ட இந்த இதழ் 2007-ல் ‘நம் வீடு’ என்று மாறி, பின்னர் ‘தாய்வீடு’ என்ற பெயரைத் தக்கவைத்துக்கொண்டது. செய்திகளின் பின்னணி குறித்த ஆய்வுக் கட்டுரை, மொழிபெயர்ப்புக் கதைகள், முக்கியமான ஆளுமைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளுக்கான சிறப்பிதழ்கள்,
180-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் வாழ்க்கைப் பதிவுகள் என குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளைச் செய்திருக்கிறது. எழுத்தாளர் ஒன்றுகூடல், புத்தகங்களைப் பதிப்பிப்பது, தமிழ் மரபுசார் கூத்துகள், நாடகங்கள் அரங்கேற்றம், குறும்படப் போட்டிகள், சிறுகதைப் போட்டிகள் எனப் பல்வேறு கலாச்சார விஷயங்களையும் முன்னெடுத்துவருகிறது. வெற்றிப் பயணம் தொடரட்டும்!
இணையதளம்: http://www.thaiveedu.com/
ஆத்மாநாம் விருதுகள் - 2020
ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’ மூலமாக 2015 முதல் அவரது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. ‘சொல் வெளித் தவளைகள்’ கவிதைத் தொகுப்புக்காகக் கவிஞர் றாம் சந்தோஷுக்கும், ‘தாவோ தே ஜிங்’ மொழிபெயர்ப்புத் தொகுப்புக்காக சந்தியா நடராஜனுக்கும் 2020-க்கான ஆத்மாநாம் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இருவருக்கும் வாழ்த்துகள்!
இமையத்தின் புதிய குறுநாவல்
ஊரடங்குக் காலத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பதிப்பாளர்கள் பலரும் இப்போது இணையம் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே வெளியான புத்தகங்கள் பலவும், புதிய புத்தகங்களும் கிண்டில் பதிப்பாக வந்துகொண்டிருக்கின்றன. பொருளாதாரம் கையைக் கடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் சிறிய அளவிலான வருமானத்தை உத்தேசித்துப் பல பதிப்பகங்கள் தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்றுக்கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் அச்சுத் துறையின் இறங்குமுகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, இமையம் எழுதிய ‘வாழ்க வாழ்க’ குறுநாவலை ‘க்ரியா’ பதிப்பகம் அச்சுப் பதிப்பாகக் கொண்டுவந்து, நம்பிக்கையின் சிறு கீற்றைப் படரவிட்டிருக்கிறது!
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
15 mins ago
விளையாட்டு
42 mins ago
விளையாட்டு
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago