விழிகளை உயர்த்திய வழிப்போக்கன்
குவித்த கரங்களில் நிறையும் நீரை
விரல்களை விரித்து வழியவிடுகிறான்
ஊற்றும் வேகத்தைக் குறைக்கிறாள்
நீர் வார்க்கும் பெண்
சிற்றூர் தண்ணீர்ப் பந்தலில் நிகழ்த்தப்படும் வார்த்தைகளற்ற ஆசையின் சாகசத்தை நுட்பமாக வரைந்து காட்டும் இந்தப் பிராகிருதக் கவிதை கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ‘கவி வத்சலன்’ என்று அழைக்கப்பட்ட ஆந்திர அரசன் சாதவாகனன் தொகுத்த ‘காதா சப்த சதி’ அல்லது ‘சத்த சாய்’ எனப்படும் எழுநூறு காதல் கவிதைகளில் ஒன்று இது. சங்க அக இலக்கிய மரபின் தொடர்ச்சியாக ஜார்ஜ் எல். ஹார்ட் அடையாளப்படுத்தும் இந்தப் பிராகிருதக் கவிதைகள் எளிமையானவை; தொனிப்பொருள் கூடியவை; மனத்தடைகள் அற்றவை.
‘கடைக்கண் பார்வையின் கரை ஓரத்திலிருந்து, காமத்தின் செழித்த பள்ளத்தாக்கு வரை காதலின் நிலப்பரப்பை வரைபட மாய் அடக்கிக் காட்டுபவை இந்தக் கவிதைகள்’ என்று குறிப்பிடுகிறார், காதா சப்த சதியின் கவிதைகளில் 207 கவிதைகளை ஆங்கிலத்தில் நுட்பமாக மொழிபெயர்த்துள்ள அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ர.
சங்க அகப்பாடல்களின், குறிப்பாக ஐங்குறுநூற்றின் சாயல் கொண்ட சப்த சதிக்கவிதைகள், பெரிதும் பெண்குரலில் பேசுபவை. கிராமப் பெண்களின் ஆற்றொண்ணாத வேட்கை, கோதாவரி வெள்ளமாய்ப் பாய்ந்து செல்கிறது இந்தக் கவிதைகளில். கணவனை அன்றிக் காதலனையும் நேசிக்கும் உணர்ச்சிமயமான பெண்களின் உலகம் நூதனமாய்க் காட்சி தருகிறது.
தீபத்தின் தைலம் தீர்ந்துவிட்டது
திரி இன்னும் எரிகிறது
இளங்காதலரின் கலவியில் திளைத்து
********
அவளுடைய உந்திச்சுழியில்
இளைய பிட்சுவின் விழி
அவளுடைய பார்வையோ
அவனுடைய அழகிய முகத்தில்
அகப்பையையும் பிட்சை ஓட்டையும்
சுத்தமாக நக்கும் காகங்கள்
தலைவன், தலைவி, தோழி, பாங்கன், தாய் முதலான அகப்பாடல் மரபுப் பாத்திரங் களோடு மாமி, சக்களத்தி போன்ற உறவு நிலையினரும் கலந்துகொள்கிறார்கள். குலமகள், பிறன் மனைவி, பரத்தை ஆகிய மூன்று வகைப் பெண்களும் இயல்பாகக் கவிதை உலகினுள் உலவுகிறார்கள். அறிஞர் மு.கு.ஜகந்நாத ராஜா குறிப்பிடுவது போல், ‘சங்க அக இலக்கியம் கற்பனை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது என்றால், காதா சப்த சதி யதார்த்த வாழ்வியலை அடிப்படையாக கொண்டது’. திணைக்கும், ஒழுக்கத்துக்கும் இடையிலான ஊசலாட்டம், கவிதையாக மாறும் அற்புதம் சப்தசதியில் நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லவேண்டும்.
அரவிந்த கிருஷ்ண மெர்ஹோத்ரவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழ்ப் படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சில கவிதைகளைப் படிப்பது, சப்த சதியின் வசீகரமான உலகத்திற்குள் சிறிது பயணிக்க உதவக்கூடும்.
- ந.ஜெயபாஸ்கரன்,
கவிஞர், விமர்சகர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 mins ago
விளையாட்டு
16 mins ago
சினிமா
17 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
51 mins ago
சினிமா
57 mins ago
இந்தியா
38 mins ago
கருத்துப் பேழை
47 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago