இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) கறுப்புப் பொருளாதாரத்தின் அளவு 62 சதவீதமாக உயர்ந்திருப்பதாக பொருளாதார அறிஞர் அருண் குமார் தெரிவித்தார்.
விழாவின் முதல் நாளில் ஊழல் மற்றும் கறுப்புப் பணம் குறித்த அமர்வு நடைபெற்றது. இதில் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான அருண் குமார், ‘தி இந்து’ பதிப்பகக் குழுமத்தின் தலைவர் என்.ராம் ஆகியோர் உரையாடினர். ‘தி இந்து’ குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் ராஜிவ் சி.லோச்சன் நெறியாள்கை செய்தார்.
தடைபடும் முன்னேற்றம்
இந்த அமர்வில் முதலாவதாகப் பேசிய அருண் குமார், “1950-களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார அறிஞர் நிக்கோலஸ் கல்டோர், இந்தியாவில் உள்ள கறுப்புப் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்தார். அப்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கறுப்புப் பொருளாதாரத்தின் அளவு 4 - 5 சதவீதம்.
இன்று அதன் அளவு 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது வெள்ளைப் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.150 லட்சம் கோடி என்றால், கறுப்புப் பொருளாதாரத்தின் மதிப்பு அதைவிடக் கூடுதலாக ரூ.93 லட்சம் கோடியைக்கொண்டிருக்கிறது. தற்போது நம் நாட்டின் கறுப்புப் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.243 லட்சம் கோடி. கறுப்புப் பணம் குறித்துப் பல தவறான புரிதல்கள் இன்று நம்மிடையே உள்ளன. கறுப்புப் பொருளாதாரம் என்பதையும், கறுப்புப் பணம் என்பதையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதேபோல கறுப்புப் பணம், பணமாக மட்டுமே பதுக்கப்படுவதாகக் கருதுவதும் தவறு.
கறுப்புப் பணம் பெரும்பாலும் வெளிநாடுகளில் பதுக்கப்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள். 10 சதவீதம் மட்டுமே வெளிநாடுகளில் பதுக்கப்படுகிறது. மீதி 90 சதவீதம் இந்தியாவுக்குள்ளேயே தான் சுழன்றுகொண்டிருக்கிறது. வரி அதிகமாக இருப்பதால்தான் கறுப்புப் பணம் உருவாகிறது என்ற வாதமும் தவறு” என்றார். கறுப்புப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தினால், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு நிகராக இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஞ்ஞான ரீதியிலான ஊழல்
என்.ராம் பேசும்போது, “இன்று ஊழல் நீக்கமற நிறைந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. இருக்கும் ஊழல்களிலேயே பெரும் பிரச்சினைக்குரியது அரசியல் ஊழல்தான். அரசியல் பொருளாதாரத் தில் ஆழமான மாற்றங்களைக்கொண்டு வராதவரை, அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாது.
தமிழகத்தில் பல காலமாக விஞ்ஞான ரீதியிலான ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு, ஜெயலலிதாவின் வழக்கே உதாரணம். ஊழலை வெளிக்கொண்டு வருவதில் பத்திரிகைகளுக்கு நிறைய பங்கு உண்டு. ‘பெய்டு நியூஸ்’ போன்ற நடைமுறைகள் ஊடகத்துறையிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
12 mins ago
சுற்றுச்சூழல்
22 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago