வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ஒவ்வோர் ஆண்டும் ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பாக ‘நிகரி’ என்னும் விருது 2013-லிருந்து அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியாகப் பணியாற்றும் பேராசிரியர் அறவேந்தனுக்கும் திருநெல்வேலி மாவட்டம் இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் மு. இளங்கோ கண்ணனுக்கும் வழங்கப்படுகிறது. நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், ரூ.10,000 பணமுடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது. பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் இன்று ‘நிகரி’ விருதளிப்பு விழா நடைபெறுகிறது. விருது பெறும் சமத்துவ ஆசிரியர்களுக்கும் இந்த விருதை வழங்கிவரும் ‘மணற்கேணி’ ஆசிரியர் ரவிக்குமாருக்கும் வாழ்த்துகள்! அரசு சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும்போது ‘வகுப்பறையில் சமத்துவம்’ என்ற அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
விருதாளர்களைக் கொண்டாடித் தீர்த்த ஆத்மாநாம் விருதுகள்
சமீபத்தில் ஆத்மாநாம் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. ’பெருங்கடல் போடுகிறேன்’ கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் அனாருக்கும் ரூமி கவிதைகளின் மொழிபெயர்ப்பான ‘தாகம் கொண்ட மீனொன்று’ தொகுப்புக்காக சத்தியமூர்த்திக்கும் இந்த ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது வழங்கப்பட்டது. விருதைவிடவும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றையும் விருது அமைப்பாளர்கள் செய்திருந்தார்கள். கவிஞர் அனார் கவிதைகள் குறித்து இதுவரை வெளியான மதிப்புரைகள், அனாரின் பேட்டிகள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல், சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பு நூலைக் குறித்து ‘பிரபஞ்சத்தை வாசித்தல்’ என்றொரு தொகுப்பு நூலையும் வெளியிட்டிருக்கிறார்கள். கூடவே, விருது மேடையில் உரையாற்றியவர்களிடமிருந்து முன்கூட்டியே கட்டுரைகள் வாங்கி ‘உரைகள்’ என்ற தலைப்பில் சிறுநூலாக வெளியிட்டிருக்கிறார்கள். இதில் மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தம் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றும் உள்ளடக்கம். ஆத்மாநாம் விருதுகளை முன்னிட்டு ‘அடவி’ இதழ் ‘ஆத்மாநாம் விருது சிறப்பித’ழாக வெளியாகியிருந்தது. இந்த இதழில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக அசதா எடுத்திருந்த சத்தியமூர்த்தியின் நேர்காணலைக் குறிப்பிடலாம். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்த ரூமியின் கவிதைகள் குறித்த கனமான கட்டுரைகளும் இந்த இதழில் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மேற்கண்ட மூன்று நூல்களும் ‘அடவி’ சிற்றிதழும் இலவசமாகத் தரப்பட்டதையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்!
மேடையேறிய இமையத்தின் சிறுகதை
எழுத்தாளர் இமையத்தின் ‘போலீசு’ என்ற சிறுகதையை புதுவைப் பல்கலைக்கழக நாடகத் துறை 31.10.2017 அன்று நாடகமாக அரங்கேற்றியது. இந்த நாடகத்தைப் பேராசிரியர் இரா.இராசு இயக்க, நாடகத் துறை மாணவர்கள் இதில் நடித்தனர். நாடகத்துக்கான இசையை முருகவேல், ஜனார்த்தனன் ஆகியோர் அமைத்திருத்தனர். அதே மேடையில் இன்னொரு நிகழ்வும் நடைபெற்றது. ‘நந்தன் கதை’, ‘ஔரங்கசீப்’, ‘பெத்தவன்’ உள்ளிட்ட படைப்புகளை நாடகமாக அரங்கேற்றிய இரா.இராசுவின் 25 ஆண்டுகால நாடகத்துறைப் பணிகள் குறித்த தொகுப்பு நூலான ‘தமிழ் நவீன நாடக ஆளுமை பேரா.இரா.இராசு’ நூலின் வெளியீடும் நடைபெற்றது. இந்த நூலை எழுத்தாளர் இமையம் வெளியிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுலா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago