மிஸ் கூவாகம் அழகி போட்டியில் ஈரோடு ரியா முதலிடம்!

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் திருநங்கைக ளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் 'மிஸ்கூவாகம்-2024' பட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். திருநங்கைகள் பூசாரி கைகளால் தாலி கட்டிக்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். பின்னர் கூத்தாண்டவர் தேரோட்டம் நடைபெறும். கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள்.

அரசு சார்பில் அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்பு, தொண்டு நிறுவனங்கள் இணைந்து மிஸ் கூவாகம் போட்டியை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்காக ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கலை நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் அழகி போட்டியும் நடத்தப் பட்டன. அதில் சென்னையைச் சேர்ந்த ஷாம்சி முதலிடத்தை பிடித்து மிஸ் கூவாகம் அழகி பட்டத்தை வென்றார்.

2-வது இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த வர்ஷா ஷெட்டி, 3-வது இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுபப்பிரியா பிடித்தார். இதைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை இணைந்து 'மிஸ் கூவாகம் - 2024' அழகி போட்டி மற்றும் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள் பலர் ஆடிப்பாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து 'மிஸ் கூவாகம்-2024' அழகி போட்டி நடைபெற்றது. மூன்று சுற்றுகள் வாரியாக போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்றில் 27 திருநங்கைகள் ஒய்யாரமாக நடந்து வந்தனர். திருநங்கைகளின் நடை, உடை, பாவனை அடிப்படையில் 15 பேரை ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்தது. இரண்டாம் சுற்றில் தேர்வு பெற்ற 15 பேரில் 7 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நேற்றிரவு நகராட்சி திடலில் 'மிஸ் கூவாகம்-2024' அழகி போட்டிக்கான இறுதிச் சுற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், ஆட்சியர் பழனி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், மணிக் கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயச் சந்திரன், திமுக மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகரமன்ற தலைவர் தமிழ் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றில் மேடையில் வலம் வந்த ஒவ்வொரு திருநங்கைகளிடமும் பொது அறிவு, பாலினம் தொடர்பான கேள்விகள் கேட்டகப்பட்டன.

ஒட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் 'மிஸ் கூவாகம்-2024' பட்டம் வென்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். முதலிடத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார். 2-வது இடத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த மேகா, 3-வது இடத்தை சென்னையைச் சேர்ந்த யுவந்திலின் ஜான் பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் கிரீடம் சூட்டி வாழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், “திருநங்கைகளுக்கு 'திருநங்கை' என பெயர் வைத்தவர் கருணாநிதி. தற்போது வேலூரில் மாநகராட்சி கவுன்சிலராகவும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலராகவும் திருநங்கைகள் பதவியில் உள்ளனர்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திருநங்கைகள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் கடனுதவியை தமிழக அரசு வழங்குகிறது” என்றார். முதலிடம் பெற்றவருக்கு ரூ.50 ஆயிரம். இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.25 ஆயிரமும், 3-ம் இடம் பெற்றவருக்கு ரூ.11 ஆயிரமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

11 hours ago

வாழ்வியல்

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்