42,000 புத்தகங்களுடன் இயங்கும் விஜயகாந்த் புரவலராக உள்ள மதுரை அரசு மருத்துவமனை நூலகம்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள், உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகள், மருந்தகங்கள் இருக்கும். ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 42 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகப் பிரிவும் செயல்படுகிறது.

பொதுவெளியில் மக்கள், மாணவர்கள், குழந்தைகள் பயன்பாட்டுக்கு நூலகங்கள் அமைப்பது வழக்கம். ஆனால், மருந்து மாத்திரை சாப்பிட்டு உடலைக் குணப்படுத்த வரும் நோயாளிகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், அவர்களது மன நலனை மேம்படுத்தவும் கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பே அதாவது 1960-ம் ஆண்டு வாசிப்புச் சிந்தனையுடன் மதுரை அரசு மருத்துவமனையில் நூலகம் செயல்படுவது வியப்பூட்டுகிறது.

நடிகர் விஜயகாந்த் புரவலர்: அரசு மருத்துவமனையில் மருத்துவ மனை ‘டீன்’ அலுவலகத்துக்கு மேலே முதல் தளத்தில் 221-வது வார்டு அருகே செயல்படுகிறது இந்த நூலகம். மிகக் குறுகிய இடத்தில் செயல்பட்டாலும், பொது நூலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் இந்த இங்கு உள்ளன. நடிகர் விஜயகாந்த் இந்த நூலகத்தின் புரவலராக இருப்பது கூடுதல் சிறப்பு.

மருத்துவம், உணவு, பெண்கள் நலம், குழந்தை வளர்ப்பு, சித்த மருத்துவம் உள்ளிட்ட உடல் நலன் சார்ந்த புத்தகங்களும், மனநலன் சார்ந்த நாவல்கள், தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், குழந்தைகள் புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், அரசியல் புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

மருத்துவமனையில் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெறுவோர் அவர்களின் உடனிருப்போர், பார்வையாளர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கிடைக்கிற நேரத்தில் வந்து இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

புத்தகங்கள் படிப்பதால் மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்குப் போக கிடைக்கிற ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதாகவும் நூலகத்துக்கு வரும் உள் நோயாளிகள், பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து நூலகர் ராஜம்மாள் கூறியதாவது: தற்போது மொபைல் போன் மூலம் தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் போன்ற எத்தனையோ பொழுதுபோக்கு வசதிகள் கைக்குள் வந்துவிட்டன. அந்தக் காலத்தில் புத்தகவாசிப்பு என்பது அறிவை மேம்படுத்த மட்டுமின்றி சிறந்த பொழுதுப்போக்காகவும் இருந்தது.

அதனால், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவமனையில் பணிபுரிவோருக்காக இந்த நூலகம் ஏற்படுத்தப்பட்டது. உடலுக்கு மாத்திரைகள், மனதுக்குப் புத்தகங்கள் என்ற அடிப்படையிலே சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க இந்த நூலகம் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டது.

காலை 8.30 ணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. நோயாளிகள், பார்வையாளர்கள் தினசரி நாளிதழ் படிக்க வருகிறார்கள். காலை 11 மணியளவில் நோயாளிகள் மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படுவார்கள். அந்த நேரத்தில் இந்த நூலகத்துக்கு வந்து செல்கிறார்கள். அதுபோல், மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் பணி முடிந்து செல்லும் போது நூலகத்துக்கு வந்து தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் உறுப்பினராக உள்ளனர். சாதாரண உறுப்பினர், குடும்ப உறுப்பினர் இரண்டு முறைகளில் உறுப்பினர்கள் சேர்க்கப்படு கிறார்கள். இதற்குக் காப்புத் தொகை, சந்தா வசூலிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் வீட்டுக்குப் புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப இயங்கும் இந்த மருத்துவமனை நூலகம் நோயாளிகள், பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், புத்தகங்களை அமர்ந்து படிக்கப் போதுமான இட வசதி இல்லாதது தான் மிகப் பெரிய குறையாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்