எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும் - நிதிஷ் சந்திப்புக்குப் பின்னர் மம்தா பானர்ஜி பேட்டி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: "எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை இன்று (ஏப்.24) கொல்கத்தாவில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்தனர்.

2024 தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "பாஜகவை எதிர்க்கும் மெகா கூட்டணிக்கான கட்சிகள் ஒருங்கிணைப்பில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மக்களுக்கும் பாஜகவுக்கும் எதிரானதாக மட்டுமே இருக்கப் போகிறது. நான் ஏற்கெனவே சொல்லியதுபோல் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் தேர்தல் போருக்காக ஒன்றிணைவதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

நிதிஷ் குமாரிடம் நான் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம் பிஹாரில் இருந்துதான் ஆரம்பித்தது. அதனால் நாம் பிஹாரில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அங்கே முடிவு செய்ய வேண்டும். அதற்கும் முன்னதாக நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை வலிமையாகக் கடத்த வேண்டும். எனக்கு பாஜகவை ஜீரோவாக்க வேண்டும். அவர்கள் இப்போது ஊடக துணையோடு பெரிய ஹீரோவாக உலாவருகிறார்கள்.

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ் குமார் இன்று முதலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார். பின்னர் அவர் இன்று மாலை லக்னோ சென்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்திக்கவுள்ளார். சமீப காலமாகவே காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணக்கம் காட்டாத நிலையில் எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கூட நிதிஷ் குமார் சந்தித்தார். ஆம் ஆத்மி காங்கிரஸின் மிகப்பெரிய விமர்சகராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் குமாருடைய இந்த முயற்சியை ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ’நிதிஷ் ஃபார்முலா’ என்று கூறிவருகின்றனர்.

நிதிஷின் முயற்சி குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான கேசி தியாகி கூறுகையில், ”நரேந்திர மோடிக்கு எதிராக வெற்றியைப் பெற வேண்டுமானால் 2024ல் ஒருவரை எதிர்த்து இன்னொருவர் என்ற நிலைமட்டுமே கைகொடுக்கும். அப்படியென்றால் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

ராகுலுக்காக களம் இறங்கிய திரிணமூல்: சமீப காலமாகவே காங்கிரஸை சரமாரியாக விமர்சித்துவந்த திரிணமூல் காங்கிரஸ் அண்மையில் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்புக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்களில் களம் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ”எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும்” என்று மம்தா பானர்ஜி கூறியிருப்பது மெகா கூட்டணிக்கு ஒரு நல்லதொரு சமிக்ஞை என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்