பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச் சூடு: 4 வீரர்களைக் கொலை செய்த சக வீரர் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் இன்று (ஏப்.17) கைது செய்யப்பட்டிருப்பதாக பஞ்சாப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வீரரின் பெயர் தேசாய் மோகன் என்றும், அவர் தனக்கு நேர்ந்த தனிப்பட்ட துன்புறுத்தல் காரணமாக, சக வீரர்கள் நான்கு பேரைச் சுட்டுக்கொன்றதாக கூறியதாகவும், பதிண்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் குல்னீத் சிங் குரானா தெரிவித்துள்ளார். ஆனால் என்ன மாதிரியான துன்புறுத்தல்களுக்கு தேசாய் மோகன் ஆளானார் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்த வழக்கு குறித்த கூடுதல் தகவல்கள் போலீஸாரின் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரியவரலாம். தேசாய் மோகன் இன்று பதிண்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்காக காவலில் எடுக்கப்படுவார்.

4 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை: கடந்த ஏப்.12ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இது குறித்து இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்ட் வெளியிட்ட அறிக்கையில், "பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் புதன்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு தாக்குதல் நடைபெற்றது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்" என்று தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ராணுவ வீரர்கள் இரவு 2 மணிக்கு தூங்கி இருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர் இரவு 3 மணிக்கு அவர்கள் தூங்கிவிட்டதை உறுதி செய்துள்ளார். பின்னர் சமீபத்தில் திருடிய துப்பாக்கியால், சக ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றுள்ளார்" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பதிண்டா கண்டோமென்ட் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302(கொலை) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட சக வீரர் மோகன் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேரில் கண்ட சாட்சி தேசாய்: வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, தற்போது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் தேசாய் மோகன் மட்டுமே சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாவார். இந்த வழக்கு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மோகன் உட்பட 4 வீரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக தேசாய் மோகன்,"சம்பவம் நடந்த இடத்தின் அருகில் குர்தா பைஜாமா அணிந்து முகத்தை மூடிய இருவர் அதிகாரிகளின் மெஸ் அருகே காணப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

இணைப்பிதழ்கள்

30 mins ago

க்ரைம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்