ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை? - ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறியதாவது: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய முடியும்.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியைப் பெறுவார். ஒருவேளை இடைக்காலத் தடை விதிக்கப்படாவிட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

சூரத் நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு ஆகிய இரு விவகாரங்களுக்கு எதிராக ராகுல் காந்தி சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலில் இருக்கிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை அவரால் மேல்முறையீடு செய்ய முடியும்.

உச்ச நீதிமன்றத்திலும் அவரால் நிவாரணம் பெற முடியவில்லை என்றால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். அதற்குப் பிறகு அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஒட்டுமொத்தமாக 8 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட தடை ஏற்படும். இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் 4 வழக்குகள்... - மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் சங் பரிவார் அமைப்புகளை குற்றம் சாட்டியது தொடர்பாக, மகாராஷ்டிராவின் பிவண்டி நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவின் ஷிவ்டி, அசாமின் குவாஹாட்டி, ஜார்க்கண்டின் ராஞ்சி நீதிமன்றங்களிலும் ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்குகள், நிலுவையில் உள்ளன. இந்த 4 வழக்குகளிலும் விரைவில் தீர்ப்பு வெளியாகக்கூடும் என்று தெரிகிறது.

தீர்ப்பு விவரம்: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’’ என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி,சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

இந்தியக் குற்றவியல் சட்டம் 499,500 ஆகிய பிரிவுகளின்படி ராகுல்காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.

13 கோடி பேர் அவமதிப்பு: சூரத் நீதிமன்றம் வழங்கிய 168 பக்கத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரை ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள, மோடி குடும்பப் பெயர் கொண்ட 13 கோடி மக்களை அவர் அவமதித்து உள்ளார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பான மின்னணு ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. அவரது பேச்சை நேரில் கேட்ட சாட்சிகளும், ராகுல் காந்திக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். மோடி என்ற பெயரை அவர் வேண்டுமென்றே குறிப்பிட்டு, அவமரியாதை செய்துள்ளார்.

மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, எம்.பி. என்ற வகையில் பொதுக்கூட்டத்தில் பேசுவது, மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு எம்.பி. தவறு இழைக்கிறார் என்பது, மிகப்பெரிய தவறாகும். அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கினால், சமுதாயத்துக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்கில்... - குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ-க்களை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில், குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்குத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் நகல் 26 மணி நேரத்துக்குப் பிறகு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நேற்று கிடைத்தது. அவரது அறிவுரையின்படி, ராகுல் காந்தியின்எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘‘சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் நகல், தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

மக்களவை கூட்டத் தொடரில் நேற்று காலை ராகுல் காந்தி பங்கேற்ற நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ட்விட்டரில் ராகுல் வெளியிட்ட பதிவில், “இந்தியாவுக்காக குரல் எழுப்பி, போராடி வருகிறேன். அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்தார்.

டெல்லி விஜய் சவுக் பகுதியில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், டெல்லியில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்