''கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்'' - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: தனது தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில் மேற்குவங்கத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள நாட்டின் ஏழாவது வந்தே பாரத் விரைவு ரயில் வண்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) நேரடியாக தொடங்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானதைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் கலந்து கொண்டார். பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகள் எதுவும் ரத்துச்செய்யப்படவில்லை என்றும், நிகழ்ச்சிகளில் பிரதமர் காணொளி வாயிலாக கலந்து கொள்வார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்து.

காலையில் தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில் ஹவுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். விழாவில் மம்தா பானர்ஜி கூறியதாவது: மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, இன்று ஒரு துக்கமான நாள். உங்களின் செயல்கள் மூலம் உங்களின் தாயை நேசிப்பதற்கான பலத்தையும், ஆசீர்வாதத்தையும் கடவுள் உங்களுக்குத் தரட்டும் என்று நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் இன்று மேற்கு வங்கத்திற்கு வருவதாக இருந்தீர்கள். அதற்தாக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் உங்களின் அன்பிற்குரிய தாயாரின் இழப்பால் உங்களால் நேரில் வரமுடியாவிட்டாலும், காணொளி மூலமாக எங்களுடன் நீங்கள் மனதளவில் உடன் இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை விரைவில் முடித்துக் கொண்டு நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால் நீங்கள் அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு வருகிறீர்கள். உங்கள் தாய் உங்களுக்கு மட்டும் தாய் இல்லை. அவர் எங்களுக்கும் தாயார் தான்" என்று மம்தா பானர்ஜி பேசினார். மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு கைகூப்பி பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹவுரா - ஜல்பைய்குரியை இணைக்கும், நாட்டின் ஏழாவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இன்று உங்கள் அனைவரையும் நான் நேரில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் என்னால் நேரில் வர இயலவில்லை. அதற்காக நான் உங்களிடமும் மேற்குவங்க மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்" என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பணி முடிக்கப்பட்ட நான்கு ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதையடுத்து, தேசிய கங்கா கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்திற்கும் பிரதமர் மோடி இன்று தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிட்டக்கது.

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல் நிலை பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது தாயார் மறைவைத் தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத் விரைந்தார். அங்கு தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

எளிமையாக நடந்த இறுதிச்சடங்கு: பிரதமர் மோடியின் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று காலை 9.30 மணியளவில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. தாயார் ஹீராபென்னின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடியின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். உறவினர்களுடன் சேர்ந்து தனது தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார். சடங்குகளுக்குப் பின்னர், உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமரின் தாயாரின் இறுதிச்சங்கில் பல தலைவர்கள் பங்கேற்க இருந்த நிலையில், ஹீராபென் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் போலவே அவரது இறுதிச்சடங்கும் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்