புதுடெல்லி: சீனாவில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவல் குறைந்து, படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் பி.எஃப்.7 வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. மேலும், அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், உயரதிகாரிகள், சுகாதாரத் துறை நிபுணர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவில் தற்போதைய கரோனா நிலவரம் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், இது தொடர்பாக தீவிர கண்காணிப்பைத் தொடர வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தினர்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பதிவில், “கரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்து மாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
3-வது டோஸ் அவசியம்: கூட்டத்தில் பங்கேற்ற நிதி ஆயோக் உறுப்பினரும் (சுகாதாரம்), கரோனா தொடர்பான தேசிய செயல்பாட்டுக் குழுத் தலைவருமான வி.கே.பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா குறித்து பீதியடையத் தேவையில்லை. போதுமான அளவுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, இணை நோய் உள்ளவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும்.
சர்வதேச விமானப் பயணம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் இதுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுவரை இந்தியாவில் 28 சதவீதம் பேர் மட்டுமே 3-வது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மற்றவர்களும், குறிப்பாக மூத்த குடிமக்கள் 3-வது டோஸ் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளில் சிலருக்கு (ரேண்டம்) மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு விமான நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை நேற்று உத்தரவிட்டது. மேலும், கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரான் பி.எஃப்.7 வகை வைரஸ் இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக, குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் மேற்கொண்ட பரிசோதனையில் ஒருவருக்கு பி.எஃப்.7 வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, குஜராத்தில் மற்றொருவர், ஒடிசாவில் இருவருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் குணமடைந்துவிட்டனர். இதுவரை 4 பேருக்கு மட்டுமே இந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, அசோக் கெலாட் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “தேசிய ஒற்றுமை நடை பயணத்தின்போது, முகக் கவசம் அணிதல், அவ்வப்போது கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டும் நடை பயணத்தில் அனுமதிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாதபட்சத்தில், நாட்டு நலன் கருதி நடை பயணத்தை தள்ளிவைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
3,408 பேருக்கு சிகிச்சை: நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,408. இதுவரை கரோனா வைரஸால் 5,30,680 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 4,46,76,330 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago