பேஸ்புக் காதலி சுட்டுக்கொலை: வயதை மறைத்ததால் ஆத்திரம்.. காதலனும் தற்கொலை

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினித் குமார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி கோரியை பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார். ஜோதி கோரி (44) தன் வயதை மறைத்து காதலித்ததால் ஆத்திரமடைந்த வினித் குமார் காதலியைச் சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள சுற்றுலா மலைப்பகுதியான பேடாகாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அருகே நடுத்தர வயது பெண்மணி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார்.

உடனடியாக அந்த இளைஞரை நேதாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, ‘எனது பேஸ்புக் காதலிக்கு 44 வயது. மணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது’ என்று புலம்பிக் கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்தது.

இந்த வழக்கைப் பதிவு செய்த போலீஸார், பேஸ்புக் உதவியால்தான் இருவரின் விவரங்களை அறிந்தனர்.

உ.பி. முஸாபர்நகரின் பச்சண்டாகலா கிராமத்தை சேர்ந்த வினித்குமார்(24) 10-ம் வகுப்பு வரை படித்து கூலி வேலை செய்து வந்தார்.

இவருக்கு மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த ஜோதி கோரி பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.

சுமார் 2 வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் உருவான நட்பு காதலாக மாறியது. ஜோதியை நேரில் சந்திக்க விரும்பிய வினித், கடந்த புதன்கிழமை ஜபல்பூர் சென்றுள்ளார்.வெள்ளிக்கிழமை காலை ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜோதிக்கு போனில் பேசியுள்ளார்.

ஜோதி கூறியபடி இருவரும் பேடாகாட்டின் மலை உச்சியில் சந்தித்துள்ளனர்.

அப்போது, நீண்ட நேர பேச்சுக்கு பின் தன்னுடன் கொண்டு வந்திருந்த கள்ளத்துப்பாக்கியால், கோரியை சுட்டிருக்கிறார் வினித். மிக அருகில் நெஞ்சில் சுட்டதால், உடனடியாக கோரியின் உயிர் பிரிந்துள்ளது.

பிறகு, ஒரே ஒரு குண்டை மட்டும் ‘லோடு’ செய்யும் கள்ளத்துப்பாக்கியில் மற்றொரு குண்டைப் போட்டு தனது நெஞ்சில் சுட்டுக் கொண்டார் வினித்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஜபல்பூர் மாவட்ட காவல் தலைமைக் கண்காணிப்பாளர் ஹரிநாராயணாச்சாரி மிஸ்ரா கூறியதாவது:

‘ஜோதிக்கு மணமாகி மூன்று குழந்தைகள் உள்ள தகவல் அவரை வினித் நேரில் சந்திப்பதற்கு சில நாட்கள் முன்பாகவே தெரிந்திருக்க வேண்டும். இதனால், மிகவும் கோபம் கொண்டவர் கைத்துப்பாக்கியின் படத்தை பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். இதற்கு ‘லைக்’ கொடுத்த ஒரே நண்பர் ஜோதி.

ஜோதிக்கு அவரது கணவருடன் பிரச்சினை எதுவும் இருந்தது போல் தெரியவில்லை. இருவரது பேஸ்புக் நண்பர்கள் மூலமாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

ஜோதிக்கு வீட்டில் பயன்படுத்த அவரது கணவர் லேப்டாப்பும், சில மாதங்களுக்கு முன் நவீனரக மொபைலும் பரிசாக அளித்துள்ளார்.

இவருக்கு 22 வயதில் பொறியியல் பயிலும் மகளும் மற்றும் 19 வயது ப்ளஸ் 2 பயிலும் மகளும், 18 வயதில் 10-ம் வகுப்பு பயிலும் மகனும் உள்ளனர். கணவர் ம.பி அரசு நீர்வளத்துறையில் அலுவலராகப் பணியாற்றுகிறார்.

பேஸ்புக்கில் கணக்கு துவக்கிய ஜோதி அதில் தன் போட்டோவிற்கு பதிலாக ஒரு திரைப்பட நடிகையின் படத்தை போட்டு வைத்திருந்தார். பேஸ்புக்கில் முகம் தெரியாத நண்பர்களுடன் பேசும் ஒருவித சுகம், ஜோதியைக் கூடாநட்பில் தள்ளி அவரது உயிரை பலி வாங்கி விட்டது.

கவிதைக் காதல்

வினித், பேஸ்புக்கில் தினந்தோறும் ஜோதியுடன் காதல் கவிதைகளால் ‘சாட்டிங்’ செய்துள்ளார். அவர் மணமானவர் எனத் தாமதமாகத் தெரியவந்தததும் வினித் மனமுடைந்து விட்டார்.

ஜோதி தனது வயது 22 என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிக கோபம் அடைந்த வினித், ஜோதியை கொல்வதற்காகவே திட்டமிட்டு துப்பாக்கியுடன் கிளம்பி வந்திருக்கிறார். இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்ற இரண்டு தரப்பு வீட்டாரும் நம்புவதற்கு நீண்ட நேரம் பிடித்துள்ளது

முதல்முறை அல்ல

முஸாபர் நகருக்கு பேஸ்புக் கொலை புதியது அல்ல. முஸாபர்நகருக்கு அருகிலுள்ள ஷியாம்லியில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவன் மயாங்(17). சம்பவம் நடந்த அன்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மயாங்கை அவனுடன் படிக்கும் இரு மாணவர்கள் வழிமறித்து தகராறு செய்தனர். பிறகு கள்ளத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

தங்களுடன் பயிலும் ஒரு மாணவியுடன் நட்பு கொள்ள வேண்டாம் என மயாங்கை இருவரும் எச்சரித்தனர். இதை, மீறி மயாங் அந்த மாணவியுடன் பேஸ்புக் இணையதளத்தில் நட்பு வைத்திருந்ததால் இந்த கொலை நடந்துள்ளது.

உ.பி.யில் கள்ளத்துப்பாக்கிகள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு முஸாபர்நகர் மிகவும் பிரபலம். இங்கு ரூ.500க்கு கள்ளத்துப்பாக்கி எளிதாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்