கிடப்பில் மக்களின் புகார்கள்: சொந்த சம்பளம், உயரதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்திவைத்த ம.பி. கலெக்டர்

By செய்திப்பிரிவு

ஜபல்பூர்: மக்களின் புகார்களுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டதால் டிசம்பர் மாதத்திற்கான தனது சம்பளம் மற்றும் சில உயரதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்திவைக்க மத்தியப் பிரதேச மாவட்ட ஆட்சியர் ஒருவர் உத்தரவிட்டுள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திங்களன்று மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முதலமைச்சரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்தார். இதில் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் கோபத்திற்கு ஆளான மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் கரம்வீர் சர்மா, டிசம்பர் மாதத்திற்கான தனது சொந்த சம்பளம் மற்றும் சில உயரதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "மாவட்ட பஞ்சாயத்து ஆய்வின்போது அதிருப்தியடைந்த மாவட்ட ஆட்சியர் கடும் கோபத்திற்கு ஆளான நிலையில் ஆய்வின்போதே உடனடியாக ஓர் உத்தரவை தயார் செய்தார். அதில் மாவட்ட கருவூல அதிகாரிக்கு தனது சொந்த சம்பளம் உள்ளிட்ட உயரதிகாரிகள் அனைவருக்கும் சம்பளத்தை நிறுத்திவைக்கவும், இதனை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 100 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

துணை ஆணையர்கள், தாசில்தார்கள் சம்பளம் நிறுத்திவைப்பு: நகரங்களில் தூய்மை தொடர்பான ஹெல்ப்லைன் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்ததற்காக துணை நகராட்சி துணை ஆணையர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க சர்மா மேலும் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி வருவாய்த்துறை வழக்குகளில் அலட்சியம் காட்டியதற்காக சில தாசில்தார்களுக்கும், பல்வேறு வழக்குகளை கையாள்வதில் மெத்தனமாக செயல்பட்டதற்காக செயல் பொறியாளர் பிஐயு (திட்ட அமலாக்கப் பிரிவு) ஆகியோரின் அகவிலைப்படியை நிறுத்தி வைக்குமாறும் அந்த உத்தரவில் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கூட்டத்திற்கு வராத மாவட்ட சந்தைப்படுத்தல் அதிகாரிக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சிஎம் ஹெல்ப்லைன் தொடர்பான அனைத்துப் புகார்களையும் தீர்வு காண டிசம்பர் 31க்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளார். தவறினால் மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் ஆட்சியர் கரம்வீர் சர்மா அறிவுறுத்தியுள்ளார்" என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ள நடவடிக்கைக்கு மக்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்