பிஎம் கேர்ஸில் உள்ள நிதி அரசாங்கத்தின் நிதி அல்ல. இந்த அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட நிதி அரசாங்கததின் நிதி அல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள்ளும் வராது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்' என்ற நிதியத்தை அறிவித்தார். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்தனர்.
இதையடுத்து, இந்த நிதி தொடர்பான சந்தேகங்களை, எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சம்யக் அகர்வால் என்பவர் பிஎம் கேர்ஸ் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில், “பிஎம் கேர்ஸ் அரசாங்கத்தின் அமைப்பு அல்ல என்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசின் பெயர், பிரதமரின் புகைப்படம், அரசின் இலச்சினை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்ட உடன் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிதியத்தின் வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தணிக்கை செய்து, நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
பிஎம் கேர்ஸ் நிதி அரசாங்கத்துக்குரியது இல்லையென்றால், பிஎம் கேர்ஸ் நிதியில் பிரதமர் பெயரை, இணையதளம், உள்ளிட்டவற்றில் வெளியிடுவதைத் தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க கடந்த மார்ச் 9-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் மற்றொரு மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், பிஎம் கேர்ஸ் நிதியத்தை அரசாங்க அமைப்பாக அறிவிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட விவரங்களை வழங்க மத்திய பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார். ஆதலால், அரசாங்க அமைப்பாக பிஎம் கேர்ஸை அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த இரு மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றம் ஒன்றாக விசாரித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், நீதிபதி அமித் பன்சால் ஆகியோர் முன் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிஎம் கேர்ஸ் நிதி குறித்து பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரதமர் அலுவலகம் கவுரவ அடிப்படையில்தான் செயல்படுகிறது. அறக்கட்டளையின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையாகவும், மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறையின் அறிவுரையின் பெயரில் தணிக்கையாளர் மூலமே தணிக்கை செய்யப்படுகிறது.
வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை இணையதளத்தில் தணிக்கை அறிக்கையும், நிதி பெறப்பட்ட விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை, எந்தச் சட்டத்தாலும் உருவாக்கப்படவில்லை. பிஎம் கேர்ஸ் நிதி அரசாங்கத்தின் நிதியும் அல்ல. தாமாக முன்வந்து அளிக்கும் தனிநபர், நிறுவனங்கள் நன்கொடையை மட்டுமே பிஎம் கேர்ஸ் நிதி பெறுகிறது. மத்திய அரசுக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை, மத்திய அரசின் எந்த விவகாரத்துக்கும், செயலிலும் ஒரு பகுதியாக பிஎம் கேர்ஸ் நிதி இல்லை. மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையால் தணிக்க செய்யவும் முடியாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பு அல்ல. ஆதலால், தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அறக்கட்டளையின் செயல்பாடுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசோ அல்லது மாநில அரசோ கட்டுப்படுத்தாது.
நன்கொடைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமும், காசோலை மூலமும், வரைவோலை மூலமும் மட்டுமே பெறப்படுகிறது. தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையும், செலவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
29 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago