ஜூலை 31-ம்  தேதிக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்; புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு தானியம் பெற வசதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-ம் தேதிக்குள் மாநில அரசுகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும், இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு தானியங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை வழங்கும் ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தொடக்கத்தில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இத்திட்டத்தை எதிர்த்தன.

ஆனாலும், ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, ஜார்க்கண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்தன. மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக இணைந்து வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இந்தியாவில் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் குடும்பஅட்டை மூலம் ரேஷன்களில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும்.

இது நடைமுறைப்படுத்தப்படாததால் கரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்ஆர் ஷா அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு கூடுதலாக உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும்.

முறைசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கான திட்டத்தை தயாரித்து ஜூலை 31க்குள் வெளியிட வேண்டும். இதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் உதவி திட்டத்தை கோவிட் பெருந்தொற்று முடியும் வரை செயல்படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள், ஜூலை 31-ம் தேதிகுள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு தானியங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

6 mins ago

சுற்றுலா

28 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

41 mins ago

உலகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

மேலும்