சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் உ.பி. அரசியல் கட்சிகள்: பாஜக கூட்டணி கட்சிக்கு வலை வீசும் அகிலேஷ்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் 2022 இல் நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக அதன் அரசியல் கட்சிகள் தயாராகத் துவங்கி விட்டன. இங்கு பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் வலைவிரித்துள்ளார்.

பிஹாரில் அதிகமுள்ள குர்மி சமூகத்தினர் அதன் எல்லையில் அமைந்துள்ள உ.பி.யின் கிழக்குப் பகுதியிலும் கணிசமாக உள்ளனர். இவர்கள் தம் சமூகத்தினரின் அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு தமது ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

இதை உணர்ந்த பாஜக 2014 முதல் அப்னா தளம் (எஸ்) கட்சியை தனது கூட்டணியில் சேர்த்தது. இதன் நிறுவனரான சோனு லால் பட்டேலின் மகள் அனுப்பிரியா பட்டேலுக்கு மத்திய மருத்துவநலத்துறையில் இணை அமைச்சராகவும் அமர்த்தி இருந்தது.

எனினும், இந்த நிலைமை 2017 தேர்தலில் உ.பி. சட்டப்பேரவையில் பாஜகவிற்கு கிடைத்த தனி மெஜாரிட்டியால் மாறத் துவங்கியது. 2019 மக்களவை தேர்தலிலும் தொடர்ந்த பிரதமர் நரேந்தர மோடி அலையால், அப்னா தளம்(எஸ்) கட்சியின் செல்வாக்கு பாஜகவிற்கு தேவைப்படவில்லை.

இதன் காரணமாக அனுப்பிரியா பட்டேலுக்கு இரண்டாவது ஆட்சியின் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை எனக் கருதப்படுகிறது. இதேபோல், உ.பி. மேலவையின் உறுப்பினராக இருக்கும் அனுப்பிரியாவின் கணவரான ஆஷிஷ் பட்டேலுக்கும் முதல்வர் யோகி அமைச்சரவையில் எந்த பதவி கிடைக்கவில்லை.

இதனால், பாஜக மீது அப்னா தளம் (எஸ்) தலைவர் அனுப்பிரியா அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த சூழலை பயன்படுத்தி அவரது கட்சிக்கு முன்னாள் முதல்வரான அகிலேஷ் வலை வீசியுள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் அமைதியாக சிறிய கட்சிகளை சேர்த்து வரும் சமாஜ்வாதி, அனுப்பிரியாவுடன் கூட்டணி அமைக்க முயல்கிறது. சோனு லால் கட்சி துவக்குவதற்கு முன்பாக மாயாவதியின் பகுஜன் சமாஜில் இருந்தார்.

அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறியது முதல் எதிர்த்து வந்த அனுப்பிரியா, மாயாவதியுடன் நட்பு பாராட்டத் துவங்கி உள்ளார். பாலிவுட்டின் நடிகரான ரன்தீப் ஹுட்டா சமீபத்தில் மாயாவதிக்கு எதிராகக் கருத்து கூறி இருந்தார்.

அனுப்பிரியா

இதை கண்டித்த அனுப்பிரியா, அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகியிடமும் வலியுறுத்தி இருந்தார். இதை வைத்து மாயாவதியுடன் அப்னா தளம் (எஸ்) கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

உ.பி.யில் 9 எம்எல்ஏக்களை வைத்துள்ள அப்னா தளம் (எஸ்) தலைவர் அனுப்பிரியா மிர்சாபூரின் மக்களவை தொகுதியில் இரண்டாவது முறை எம்.பியாக உள்ளார். இவருக்கு தன் தாயான கிருஷ்ணா பட்டேலுடன் மோதல் உருவானது.

இதனால், அப்னா தளம் கட்சியை விட்டு வெளியேறி அப்னா தளம்(எஸ்) எனும் பெயரில் புதிய கட்சியை அனுப்பிரியா நடத்துகிறார். அனுப்பிரியாவை விட அவரது தாயான கிருஷ்ணா பட்டேலுக்கு குர்மி சமூக ஆதரவு குறைவு.

ஒருவேளை தன் கூட்டணியிலிருந்து அனுப்பிரியா வெளியேறினால் அவரது தாயின் அப்னா தளத்தை தன் பக்கம் இழுத்து அக்கட்சியை பாஜக வளர்த்து விடும் வாய்ப்புகளும் நிலவுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

வாழ்வியல்

18 mins ago

ஜோதிடம்

44 mins ago

க்ரைம்

34 mins ago

இந்தியா

48 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்