கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கோரி மனு: மத்திய அரசு, டெல்லி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

By பிடிஐ

நாடு முழுவதும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து மத்திய அரசும், டெல்லி அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்தார் சீம், ஜாய்ஸ் மூலம் இரு மாற்றுத்திறனாளிகள் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் மத்திய அரசு பல்வேறு பிரிவினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு எனச் சிறப்புப் பிரிவை உருவாக்கி அவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமத்துவ உரிமைக்கு எதிரானதாக இருக்கிறது.

மத்திய அரசும், டெல்லி அரசும், தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. மற்றவர்களின் உதவியோடு செயல்படும் மாற்றுத்திறனாளிகளில் சில பிரிவினர், கரோனா வைரஸ் பாதிப்புக்கு எளிதில் ஆளாகிவிடுவார்கள்.

குறிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடிப்பது, சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது ஆகியவை மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை சவாலானது. குடும்பத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கவனித்துக் கொள்பவர்கள் மூலமும் எளிதில் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

இதுபோன்ற சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை கரோனா தொற்றிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் காக்க, அவர்களுக்குச் சிறப்புப் பிரிவை உருவாக்கி தடுப்பூசி செலுத்த உத்தரவிட வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள், அவர்களைக் கவனித்துக் கொள்வோருக்கு வயது வேறுபாட்டைப் பார்க்காமல் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும்''.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

கருத்துப் பேழை

22 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்