காலனியாதிக்க மன நிலையில் எழுதப்பட்டவை மட்டுமே இந்தியாவின் வரலாறு அல்ல: பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

காலனியாதிக்க ஆட்சியாளர்கள் அல்லது காலனியாதிக்க மன நிலையில் எழுதப்பட்டவை மட்டுமே இந்தியாவின் வரலாறு கிடையாது என பிரதமர் மோடி கூறினார்.

நமது நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் நாம் நுழையும் இந்தத் தருணத்தில், நாட்டுக்காக பெரும் பங்களிப்பு செய்த வரலாற்று நாயகர்ககளையும், நாயகிகளை நினைவுகூர வேண்டியது மிக முக்கியமானதாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியாவுக்காக தங்களின் அனைத்து விஷயங்களையும் தியாகம் செய்தவர்களுக்கு வரலாற்றுப் புத்தகங்களில் உரிய பங்கு அளிக்கப்படவில்லை என்று பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரலாற்றை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்களை சரியாகப் பதிவு செய்யாமல், இந்திய வரலாற்றுப் பதிவாளர்கள் இழைத்த அநீதி, சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் நாம் நுழையும் இத்தருணத்தில் சரி செய்யப்படுகின்றது என்று அவர் கூறினார்.

அவர்களுடைய பங்களிப்புகளை இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டியது முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் மகாராஜா சுகல்தேவ் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டி, பஹ்ராச்சில் சித்துவாரா ஏரி மேம்பாட்டு பணியைத் தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்த நிகழ்ச்சி இன்று காணொலி மூலமாக நடைபெற்றது.

காலனியாதிக்க ஆட்சியாளர்கள் அல்லது காலனியாதிக்க மன நிலையில் எழுதப்பட்டவை மட்டுமே இந்தியாவின் வரலாறாகிவிடாது என்று பிரதமர் கூறினார். எளிய மக்கள் நாட்டுப்புறக் கலைகள் மூலமாக காலம் காலமாக கூறி வந்த மாவீரர்கள் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசாத் இந்து அரசாங்கத்தின் முதலாவது பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு வரலாற்றில் உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார். செங்கோட்டை முதல் அந்தமான் நிகோபர் வரையில் நேதாஜியின் அடையாளத்தை நாம் பலப்படுத்தி இருக்கிறோம் என்று மோடி தெரிவித்தார்.

அதேபோல, 500-க்கும் மேற்பட்ட சமஸ்தான அரசுகளை ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் படேலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பதும் நன்கு தெரிந்ததாகவே உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இன்றைக்கு ஒற்றுமைக்கான சிலை என்ற வகையில் சர்தார் பட்டேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலையாக உள்ளது.

அரசியல்சாசனத்தை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, தாழ்ந்த நிலையில் இருப்பவர்களின் குரலாக இருந்தவரான பாபாசாகேப் அம்பேத்கர் எப்போதுமே அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கப்படுகிறார். இன்றைக்கு, டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய இந்தியா முதல் இங்கிலாந்து வரையிலான இடங்கள் பஞ்சதீர்த்தம் என உருவாக்கப் பட்டுள்ளன.

``பல்வேறு காரணங்களால், உரிய அங்கீகாரம் பெறாத எண்ணற்ற தலைவர்கள் உள்ளனர். சௌரி சௌராவில் துணிச்சல் காட்டியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிட முடியுமா?'' என்று பிரதமர் கேட்டார்.

இந்தியாவின் தனித்தன்மையைப் பாதுகாப்பதற்காக சுகல்தேவ் மகாராஜா மேற்கொண்ட பங்களிப்பும் மறக்கப்பட்டுவிட்டது என்று அவர் கூறினார். பாடப் புத்தகங்களில் இடம் பெறாவிட்டாலும், சுகல்தேவ் மகாராஜா பற்றிய தகவல்கள் அவத், டராய், பூர்வாஞ்சல் நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. உணர்வுப்பூர்வமான மற்றும் வளர்ச்சிக்கான சிந்தனை கொண்ட ஆட்சியாளராக மகாராஜா இருந்துள்ளார் என்று பிரதமர் தெரிவித்தார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்