புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத் துக்கு 18 கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், பேருந்துகளும் ரயில்களும் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய சட்டங்களில் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை மறுத்துள்ள மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் இருமடங்கு அதிகரிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும், அதை ஏற்க மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 27-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி புறநகர் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் டெல்லி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. புதிய வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் பிடிவாதமாக உள்ளனர். இதனால் 5 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடி வடைந்தது.
இதையடுத்து நாளை (டிச.9) மீண்டும் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு மீது
நம்பிக்கை இல்லை என்று தெரிவித் துள்ள விவசாய அமைப்புகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன. இதன் ஒருபகுதியாக இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத் துள்ளன. இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, சிவசேனா, ஆம்ஆத்மி, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 முக்கிய கட்சிகள் அறிவித்துள்ளன.
வேலைநிறுத்தப் போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று விவசாய அமைப்புகள் அறிவித்துள் ளன. பிற்பகல் 3 மணி வரை போராட் டம் நடக்க உள்ளது. பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை போராட் டம் நடத்தப்போவதாக பாரதிய கிஸான் யூனியன் விவசாய அமைப்பு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் கூறும்போது, ‘‘வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பொதுமக்களை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்ப வில்லை. அலுவலகம், தொழிற்சாலை களுக்கு செல்பவர்கள் காலையில் எந்த பிரச்சினையும் இன்றி செல்ல முடியும். அலுவலகத்துக்கு செல்ல விரும்புபவர்கள் தங்களது அடை யாள அட்டையைக் காட்டிவிட்டு செல்லலாம்’’ என்றார்.
அதே நேரத்தில் பல்வேறு இடங் களில் சாலை மறியல் போராட்டத்தை நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதனால் போக்கு வரத்து பாதிக்கப்படும் என தெரிகிறது. வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி, அவுசான்டி, ஜரோடா, பியாவோ மணியாரி, மங்கேஷ், டெல்லியையும் நொய்டாவையும் இணைக்கும் சில்லா எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, நாடுமுழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி அமைதி நிலவச் செய்யுமாறு மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவு பிறப் பித்துள்ளது. இதுதொடர்பாக மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில், ‘நாடுமுழுவதும் இன்று (டிச.8) வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கவுள்ளதால் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மாநிலங்களில் அமைதி யான சூழ்நிலை நிலவ ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். முக்கிய அரசு கட்டிடங்கள், பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதரவு
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம் யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய திமுக கூட்டணி கட்சி களும், தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. பல விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித் திருந்தாலும் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும் என போக்குவரத் துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது. ‘‘கரோனா பாதிப்பால் பயணிகளின் வருகை குறைவாக இருக்கிறது. இருப்பினும், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு போதிய அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்தால் பேருந்துகளின் சேவையில் பாதிப்பு இருக்காது. அரசு பேருந்துகள் முழு அளவில் இயக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்’’ என்றனர்.
இதேபோல, தற்போது இயக்கப் பட்டு வரும் கரோனா சிறப்பு ரயில்கள், சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களின் சேவையிலும் எந்த பாதிப்பு இருக்காது. ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
க்ரைம்
5 mins ago
விளையாட்டு
34 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
57 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago