தனியார் பெரு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம், தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை வழங்கியது.
வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்த பிறகு பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையின்படி வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கி சேவையை தொடங்க முடியும் என கூறப்படுகிறது.
இதற்குப் பரவலாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஏற்கெனவே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், "பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்ற யோசனை மிகவும் மோசமானது. இது, ஒரு சில கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதார அரசியல் அதிகாரத்தை குவிக்க வழிவகுக்கும். நிறைய வங்கிகளைத் திறப்பது அரசாங்கத்துக்கு அவசியமானது என்றாலும் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிப்பது என்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல" எனத் தெரிவித்திருந்தார்.
இதே கருத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யாவும் விமர்சித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது ப.சிதம்பரமும் இணைந்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று பேசிய ப.சிதம்பரம், "தனியார் பெரு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது. நாட்டில் வங்கித் துறையில் இருக்கும் ஒட்டுமொத்த முதலீடு என்பது ரூ140 லட்சம் கோடி. இதுமிகப்பெரிய வளம். தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதித்தால் இவை சிறு பங்கை முதலீடு செய்துவிட்டு தேசத்தின் நிதியை கட்டுப்படுத்தும்.
மேலும், வங்கிகள் தொடங்கும் உரிமத்தை யார் பெறுவார்கள் என்று அனைவரும் அறிந்த ரகசியம். அரசியல் தொடர்புடைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் உரிமம் கிடைக்கும். இவை, வங்கிகளை கைக்குள் போட்டுக்கொள்ளும் சதித்திட்டம்.
வணிக நிறுவனங்களின் பிடியில் இருந்து வங்கிகள் மீட்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50 ஆண்டுகளில் பெறப்பட்ட எண்ணற்ற நன்மைகளை, இந்த யோசனை சீர்குலைத்து விடும். எனவே, மத்திய அரசின் இந்த யோசனையை அனைவரும் எதிர்க்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
31 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago