கரோனா வைரஸ் பரவல் காலத்தில் வங்கிக் கடன் பெற்றவர்கள் கடனைச் செலுத்தும் தொகைக்கு வட்டிக்கு வட்டி விதிக்கும் விவகாரத்தில், மேலும் 6 மாத காலத்துக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என அவகாசம் அளிப்பது கடனைத் திருப்பிச் செலுத்துவோர் ஒழுக்கத்தில், தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடன் வழங்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர்க் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு கடன், வட்டி, வட்டிக்கு வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.
ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் தள்ளுபடி செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டிருந்தது. 2 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் கேட்டது மத்திய அரசு. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இனிமேல் அவகாசம் அளிக்க இயலாது. விரைவில் முடிவைக் கூறுங்கள் எனக் கூறி வழக்கை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கே.வி காமத் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய நிதியமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “கரோனா காலத்தில் வங்கியில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றுள்ள தனிநபர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கல்விக் கடன், வீட்டுக் கடன், வீட்டுப் பொருட்கள் வாங்குதல், வாகனக் கடன், தனிநபர்க் கடன் என அனைத்துக் கடன்கள் மீதான வட்டி மீது வட்டி அடுத்த 6 மாதங்களுக்கு விதிக்கப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்துவதில் நீண்ட காலம் விலக்கு அளிப்பது என்பது கடன் பெற்றவர்களின், திருப்பிச் செலுத்துபவர்களின் ஒழுக்கத்தை, தரத்தைப் பாதிக்கும். கடன் தவணையைச் செலுத்தத் தொடங்கும்போது கடன் பெற்றவர்கள் முறையாகச் செலுத்துவார்களா என்பதிலும் இடர்ப்பாடுகளை அதிகப்படுத்தும்.
வட்டிக்கு வட்டி விதித்தலில் தள்ளுபடி அளித்தல் என்பது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு பாதிப்பையும், வங்கியின் நிதி உள்ளீடுகளில் இருந்து எடுக்காமல் அதைத் தடுக்க முடியாது. இதனால் வங்கியின் முதலீட்டாளர்கள், வங்கியின் நிதி முதலீடு ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
நீண்டகாலத்துக்கு அதாவது 6 மாதங்களுக்கு மேலாக கடனை திருப்பிச் செலுத்துவதில் அவகாசம் அளிப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடன் வழங்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சிறிய அளவில் வங்கிகளில் முறையாகக் கடன் பெறுபவர்களுக்குப் பாதிப்பையும், புழக்கத்திலும் சிக்கலை ஏற்படுத்தும். இந்த அவகாசம் தொடர்ந்து வழங்குவதன் மூலம் கடன் பெறுபவர்களின் நலனுக்கும் உகந்தது அல்ல.
அதுமட்டுமல்லாமல் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மறுஉத்தரவு வரும்வரை கடன் செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்கை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
அந்தத் தடையை உடனடியாக நீக்காவிட்டால், வங்கி முறையில் பெரும் பாதிப்பு ஏற்படும். ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு நடவடிக்கையும் குறைத்து மதிப்பிடப்படும்''.
இவ்வாறு ரிசர்வ் வங்கி பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
சுற்றுச்சூழல்
45 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago