பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்த தமிழகத்திற்கு ரூ.158.65 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்த 2019-20-ல் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.158.65 கோடி. அதில் ரூ.5.3 கோடி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

பஞ்சாயத்துக்கள் சுய நிர்வாக அமைப்புகளாக செயல்படவும், பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களை வகுத்து செயல்படவும் அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுத்துள்ளது.

அதன்படி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் உள்ளூர் நிர்வாகத்தின் வெளிப்படையான, செயல்திறன்மிக்க அமைப்புகளாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது.

உள்ளூர் மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதுடன், சமூக மாற்றத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறது. நாடு முழுவதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இ- கிராம்சுயராஜ் (https://egramswaraj.gov.in) என்னும் வலைதளத்தைத்
தொடங்கியுள்ளது.

வெளிப்படையான நிதி நிர்வாகம், முன்னேற்ற அறிக்கை, வேலை சார்ந்த கணக்கு, உருவாக்கப்பட்ட சொத்துக்கள்உள்ளிட்டவை பற்றிய விவரங்கள் இதில் கிடைக்கும். பஞ்சாயத்து கணக்குகளை உரிய நேரத்தில் தணிக்கை செய்யவும் இதுவழிவகுக்கிறது.

பஞ்சாயத்துக்களை தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக உருவாக்கும்வகையில், அவற்றின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகள், ஜனநாயக திட்டமிடல், மக்களின் ஒத்துழைப்புடன், பங்கேற்புடன் முடிவுகளை எடுத்தல் ஆகியவற்றின் மூலம் பஞ்சாயத்து கட்டமைப்பு வலுப்படுத்தப்படுகிறது.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் முக்கிய நோக்கத்துடன், ராஷ்ட்ரீய கிராம சுயராஜ் அபியான்
என்னும் மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

117 பின்தங்கிய மாவட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதே இதன் குறிக்கோளாகும். இந்தத் திட்டம் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கும்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில், தமிழகத்துக்கு 2017-18-ம் ஆண்டில், ஆண்டு செயல் திட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 53.7 கோடியாகும். அதில் வழங்கப்பட்டது ரூ.36.83 கோடி. 2018-19-ல் இது முறையே, ரூ. 96 கோடியாகவும், ரூ.57.6 கோடியாகவும் இருந்தது. 2019-20-ல்
ஒதுக்கப்பட்ட தொகை ரூ.158.65 கோடி. அதில் வழங்கப்பட்டது ரூ.5.3 கோடி. 2020-ல் இதுவரை ஒதுக்கப்பட்டது ரூ. 282.78 கோடி.
மாநிலங்களின் நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில், நிதி ஆணையம் பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் 280 (3) (bb) பிரிவு அதிகாரமளித்துள்ளது.

அதன்படி, 14-வது நிதி ஆணையம், 2015 முதல்
2020 வரை பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்த 26 மாநிலங்களுக்கு ரூ.1,80,237 கோடி அளவுக்கு நிதி
வழங்கியுள்ளது.

2020-21 நிதியாண்டு காலத்துக்கு, 15-வது நிதிக்குழு ரூ. 60,750 கோடியை 28 மாநிலங்களின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு
ஒதுக்கியுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட நிதியில் இதுவே அதிக அளவாகும்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பஞ்சாயத்து ராஜ்
அமைப்புகளை வலுப்படுத்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின்
திட்டங்களை செயல்படுத்த, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அவற்றைச் செயல்படுத்த
அவ்வப்போது தக்க அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.

பஞ்சாயத்துகளின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், பொறுப்புடைமை ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துக்களை தேர்வு செய்து, ஊக்குவிப்பு
விருதுகள் வழங்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்