தங்கம் கடத்தல் வழக்கு; கேரள அமைச்சர் ஜலீல் என்ஐஏ விசாரணைக்கு ஆஜர்: பினராயி விஜயன் அரசு ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்

By பிடிஐ

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பாக மாநில உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் இன்று தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.

அந்நிய நாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தைப் பின்பற்றாமல், ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் மூலம் புனித குர்ஆன் நூலை உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் பெற்றது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனை மேலாளராக இருந்த ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர். தற்போது மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனர்.

ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கும் மாநில உயர் கல்வி அமைச்சர் கே.டி. ஜலீலுக்கும் அறிமுகம் இருந்தது. கடந்த ஜூன் மாதத்தில் 9 முறை தன்னுடன் பேசினார் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் எப்சிஆர்ஏ சட்டத்தை மீறி புனித குர்ஆன் நூலை ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் மூலம் பெற்றார் என்று தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த வாரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி ஜலீலிடம் விசாரணை நடத்தி அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என்ஐஏ அமைப்பினர், அமைச்சர் ஜலீலுக்கு நோட்டீஸ் அனுப்பி இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கோரினர்.

ஊடகங்களுக்குத் தெரியாமல் இன்று காலை 6 மணிக்கு அமைச்சர் ஜலீல் திருவனந்தபுரத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்குச் சென்றார். ஆனால், மலையாள சேனல் ஒன்று ஜலீல் என்ஐஏ அலுவலகத்துக்கு விசாரணைக்குச் சென்றது குறித்து செய்தி வெளியிட்டது. இதையடுத்து, என்ஐஏ அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கொச்சி நகரில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதல்

ஆனால், தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அமைச்சர் ஜலீல் ஆஜரான செய்தி அறிந்ததும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக தனித்தனியாகப் போராட்டம் நடத்தின. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் எனக் கோரி காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள், வலியுறுத்தத் தொடங்கினர்.

பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் பாஜக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினர் தனித்தனியாக ஆளும் பினராயி விஜயன் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, தடியடியும் நடத்தப்பட்டது. இதில் 3 கட்சிகளைச் தேர்ந்த பலர் காயமடைந்தனர்.

பாலக்காடு மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வி.டி.பலராம் போலீஸாரின் தடியடியில் காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் போலீஸார் மீது கற்களை வீசியதால், போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைத் கலைத்தனர். இதில் 12-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தங்கம் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். உடனடியாக பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு சட்ட அமைச்சரும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான ஏ.கே.பாலன் கூறுகையில், “ விசாரணைக்குச் சில தகவல்களைப் பெறவே ஜலீல் ஆஜராகியுள்ளார். ஆதலால் யாரும் ராஜினாமா செய்யத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், “ஜலீல் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், ஆளும் அரசும் ராஜினாமா செய்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்