வங்கிக் கடன் செலுத்தும் காலத்தை 2 ஆண்டுகள்வரை நீட்டிக்க முடியும்: உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி, மத்திய அரசு தகவல்

By பிடிஐ

கரோனா காலத்தில் வங்கியில் பெற்ற கடனைச் செலுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளன.

ஆனால், கடனை தாமதமாகச் செலுத்தும் காலத்தில் வட்டிக்கு வட்டி விதிக்கப்படுவதை தள்ளுபடி செய்வது குறித்து ரிசர்வ் வங்கியும்,வங்கி தலைமை அதிகாரிகளும், மத்திய அரசும் சேர்ந்து பேசி முடிவெடுத்து அறிவிக்கிறோம் எனத் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்து தவணை களையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், கடனுக்கான வட் டியை சேர்த்து வசூலிக்கும் போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமை அதிகரிக்கும். இதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்த காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலி யுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன் றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு போதிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இதுபோன்ற வட்டி ரத்து முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் முடிவுகளை எடுக்காமல் ரிசர்வ் வங்கியின் பின்னால் வசதியாக மத்திய அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நீதிபதி பூஷண் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஒரு வாரகால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி வருவதாக துஷார் மேத்தா தெரிவித்தார்.இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வில் இந்த மனு இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அப்போது, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “ கரோனா காலத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் சிரமத்தைக் குறைக்கும் வகையில், கடனைத் திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்க முடியும்.

கரோனா காலத்தில் பொருளாதார வளர்ச்சி 23 சதவீதம் வீழ்ச்சி அடைந்துவிட்டதால், அதைச் சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது ” எனத் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள், “ கடன் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்ட காலத்தில் விதிக்கப்படும் வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யவதைப் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?” என்று மத்தியஅரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளி்ன் தலைமை அதிகாரிகள், மத்தியஅரசு ஆகிய மூன்றும் சேர்ந்து கூடி ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும். அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது”எனத் தெரிவித்தார்.

சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை(புதன்கிழமை) நாளை ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

சுற்றுலா

27 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்