ஆகஸ்ட், செப்டம்பரில் கேரளாவில் நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்படலாம்: அமைச்சர் சைலஜா பேட்டி

By பிடிஐ


கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாள்தோறும் கரோனாவில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பாதிக்கப்படலாம் என்று மாநில சுகதாாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல் கரோனா நோயாளி கேரளாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து வந்த மருத்துவ மாணவிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைபெற்று குணமடைந்தார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வந்த கேரள மாநிலம் ஒரு கட்டத்தில் ஆயிரத்துக்கும் குறைவான பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே கொண்டிருந்தது.ஆனால், அதன்பின் படிப்படியாக அதிகரி்க்கத் தொடங்கியது.

கடந்த ஜூலை 4-ம் தேதி 5 ஆயிரம் பேராக இருந்த பாதிப்பு ஜூலை 16-ல் 10 ஆயிரமாகவும், ஜூலை 28-ல் 20 ஆயிரமாகவும் அதிகரித்தது. தற்போது கேரளாவில் 13 ஆயிரத்து891 பேர் சிகிச்சையில் உள்ளனர், 129 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கரோனா பிரிகேட் ஏற்படுத்த அனைவரும் வர வேண்டும் என்று முதல்வர் பினராஜி விஜயன் அழைப்பு விடுத்தார். இதற்கான திட்டத்தையும் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய பினராயி விஜயன், மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தவிர்த்து தன்னார்வலர்கள், இளைஞர்கள் ஆகியோர் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளாவில் படிப்படியாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கரோனா தொற்று நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதலால், மாநில அரசு உருவாக்கியுள்ள கரோனா பிரிகேட் பிரிவி்ல இளைஞர்கள், தன்னார்வலர்கள் வந்து இணைந்து கரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். உலகத்துக்கே கேரளாவை முன்மாதிரியாக திகழ வைக்க வேண்டும்.

கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணி்க்கை அதிகரித்தால், பலி எண்ணி்ககையும் அதிகரிக்கும். ஆதலால், அதற்குள் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு அவசியம்.

மக்கள் அனைவரும் கண்டிப்பாக சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுவது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பதை தவிர்க்கக்கூடாது. இதன்மூலம்தான் கரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும்.

இவ்வாறு சைலஜா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்